புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வர எதிரான வழக்கு : தமிழக அரசு மேல் முறையீடு
தனிநபர் 4.5 லிட்டர் அளவுக்கு மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்தவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவில் விளக்கம் கோரி தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கடலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து செய்தது.இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் அளவுக்கு மதுபானம் கொண்டு வர உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இந்த நிலையில், இந்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்க கோரிய மனுவை நாளை விசாரணைக்கு எடுக்கக் கோரி, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் முறையீடு செய்தார். அப்போது அவர், நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக்கொள்ள அனுமதியளிக்கும் அரசாணை புதுச்சேரி மாநில மதுபானத்துக்கு பொறுந்தாது.
பிற மாநில மதுபானங்கள், மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் அதனை வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என அரசு தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் முறையீட்டை ஏற்ற நீதிபதி, விளக்கம் கோரிய மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதியளித்துள்ளார்.
What's Your Reaction?