தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி 20 தேதி முதல் காலவரையற்ற போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

அமைச்சர் தர்மேந்திர  பிரதான் பதவி விலகாவிட்டால் 20ம் தேதி முதல் டெல்லியில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. 

Jun 11, 2026 - 21:20
Jun 11, 2026 - 21:23
தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி  20 தேதி முதல் காலவரையற்ற போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
தர்மேந்திர பிரதானுக்கு 13-ம் தேதி வரை கெடு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் டிப்கே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அபிஜித்,‘‘மாணவர்களை பாதிக்கும் விவகாரங்கள் குறித்து நாட்டின் இளைஞர்கள் இனி மவுனமாக இருக்கத் தயாராக இல்லை. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருகிற 13ம் தேதிக்குள் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.  ஒரு விஷயம் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.பின்வாங்கவும் மாட்டார்கள்.

இதுவரை நீட் தேர்வு தொடர்பான பிரச்னைகளால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . நீட், சிபிஎஸ்இ, கியூட் போன்ற தேர்வுகள் தொடர்பான சிக்கல்களால் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சூழலுக்கு பொறுப்பேற்பதற்கு யாரும் தயாராக இல்லை. அமைச்சரின் பதவி விலகல் குறித்த அறிவிப்பு வராவிட்டால் நாங்கள் நாடு தழுவிய இயக்கத்தை தொடங்குவோம். அது புனேயில் இருந்து தொடங்கும். நுழைவு தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிவுகள் நடக்கின்றன. 

சர்வர்கள் செயலிழக்கின்றன. மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கு யார் பொறுப்பேற்பார்கள், இது எவ்வளவு காலம் தொடரும்? தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் வருகிற 20ம் தேதி நாடு முழுவதிலும் இருந்து இளைஞர்கள் டெல்லியில் திரள்வார்கள், அமைச்சர் பதவி விலகும் வரை அவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.காலவரையற்ற போராட்டம் தொடரும்” இவ்வாறு அவர் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow