உலக பூமி தினம்.. போர்களால் பூமிக்கு பேரழிவு.. பூமியை காக்க ஜனநாயக சக்திகள் உறுதியேற்க வேண்டும்

உலக பூமி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக பூமி தினத்தை சிறப்பு டூடுள் உடன் கொண்டாடுகிறது கூகுள். கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவிகள் உலக புவி தினத்தை முன்னிட்டு குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

Apr 22, 2024 - 13:58
உலக பூமி தினம்.. போர்களால் பூமிக்கு பேரழிவு.. பூமியை காக்க ஜனநாயக சக்திகள் உறுதியேற்க வேண்டும்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவ மாணவிகள் இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு சாலைகளில் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றி  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  இதில் மக்கும் குப்பை,மக்காத குப்பைகளை தனி தனியாக சேகரித்து அதனை மறு சுழற்சி மையத்திற்கு கொடுக்க போவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குப்பைகள் இல்லாத பூமியை உருவாக்குவோம், வன விலங்குகளை பாதுகாப்போம் போன்ற விழிப்புணர்வு பதாதைகளை எடுத்துகொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் 20 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

பூமியை காக்க என்ன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் மருத்துவர் வீ.புகழேந்தி. அவர் தனது முகநூல் பக்கத்தில், இயற்கையை பின்பற்றி, பூமியை காக்காவிட்டால் பூமி பேரழிவை சந்திக்கும் என்ற உண்மையை உணர்த்தவே,1971ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் தேதியை உலக பூமி தினமாக கொண்டாட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை இயக்குநர் திரு. தாண்ட்(U.Thant)வலியுறுத்தினார். 

பூமியைக் காக்க ஏறக்குறைய 20 நாட்கள் தற்போது பல்வேறு சுற்றுச்சூழல் தினங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலைக் காக்க பல்வேறு திட்டங்கள் இருந்தாலும்,அவை போதுமானதாக இல்லாததால் பூமி அழிவுப்பாதையை நோக்கி நகரக்கூடும் என்பதே கள உண்மை. கடைசியாக வந்த புள்ளிவிபரங்களின் படி, கரியமிலவாயுவின் அளவு 424 ppm ஆக உயர்ந்துள்ளது.-(NOAA).

1850ம் ஆண்டிலிருந்து இதுவரை,2023ம் ஆண்டு,அதிகம் வெப்பமிகுந்த ஆண்டாக இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த வெப்ப உயர்வு,பிப்ரவரி 2024 வரை தொடர்ந்துள்ளது தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இந்தியாவில் வெப்ப உயர்வு காரணமாக, நீர்நிலைகளில் நீரின் இருப்பும்,நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.

ஆர்டிக்,அண்டார்டிகா பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.இமய மலைகளிலும் தான் இது நடந்துவருகிறது. இந்த 55வது வருட உலக பூமி தினத்தின் கருப்பொருள்-Planet Vs Plastics-பூமியும்-பிளாஸ்டிக் பொருளின் பயன்பாடும் என்பதே.

மனிதர்களின் செயற்கையான செயல்பாட்டால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
UNEP ஆய்வறிக்கையின் படி, உலகில் ஒவ்வொரு நிமிடமும்,1 மில்லியன் பிளாஸ்டிக் குடுவைகள் விற்பனையாகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் குறுந்துகள்கள் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. காற்றின் வாயிலாகவும்,நீர்+உணவு(உணவுச் சங்கிலி)மூலமாகவும் பிளாஸ்டிக் குறுந்துகள்கள் மனிதர்களை வந்தடைகிறது.

Ocean Conservancy and University of Toronto செய்த ஆய்வில்,88% விலங்கு புரதங்கள்,மாற்று என்ற பெயரில் உள்ள தாவரப் புரதங்கள்,அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில்(மிக அதிகம்.) பிளாஸ்டிக் குறுந்துகள்கள் நீக்கமற நிறைந்துள்ளது. University of New Mexico Health Sciences செய்த ஆய்வில்,ஆய்வுசெய்யப்பட்ட அனைத்து நஞ்சுக்கொடியிலும்(Placenta)பிளாஸ்டிக் குறுந்துகள்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டதிலிருந்து,பிறக்கும் குழந்தைகளும்,கருவுற்ற பெண்களும் கூட அதன் பாதிப்பிலிருந்து தப்பமுடியவில்லை என்பதே கள உண்மை.

1971ம் ஆண்டு,திரு.U.தாண்ட் அவர்கள்,ஐக்கிய நாடுகள் அவையின் இயக்குநராக இருந்தபோது,கொடிய போர்களின் போதாவது,மனித குலம் ஒன்றிணைந்து,போர்களுக்கு எதிராக குரல் எழுப்பி,போர்களைத் தவிர்க்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ஆனால்,தற்போது, 2022ம் ஆண்டிலிருந்து,ரஷ்யா,உக்ரெய்ன் இடையேயான போர்,இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்,தற்போது,ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.  ஐக்கிய நாடுகள் சபை இருந்தும் இப்போர்களை தடுக்க முடியவில்லை. உக்ரெய்ன் கணக்குப்படி,ரஷ்யா 8,000 தூரத் தாக்குதல் அழிப்புக் கருவிகளை(Missiles)யும்,4,600 டிரோன் மூலமான அழிவுத் தாக்குதலையும் நடத்தியுள்ளது.

இஸ்ரேல்,காசா பகுதி மீது 25,000 டன் வெடிபொருட்களை பயன்படுத்தியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தூரத் தாக்குதல்உற்பத்திக்கருவிகளை(Missiles)உற்பத்தி செய்து பயன்படுத்தும்போது,கரியமிலவாயு,ஹைட்ரோபுளுரோகார்பன் போன்ற பசுமைக்குடி வாயுக்கள் அதிகம் வெளியாகிறது.

"Conflict and Environment Observatory"-ஐச் சேர்ந்த நிபுணர்கள் செய்த ஆய்வில்,"உலக மொத்த பசுமைக்குடி வாயுக்கள் வெளியீட்டில்,இராணுவ கார்பன் வழித்தடத்தின் பங்கு-5.5% என கண்டறிந்துள்ளனர். உலகின் அனைத்து இராணுவ மையங்களையும்,ஒரு நாடாக கருத்தில் கொண்டால்,அதன் மூலம் வெளியாகும் கார்பன் வழித்தடத்தின் பங்கு,உலகின் நான்காவது பெரிய கார்பன் உமிழும் மையமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பெர்லினில் நடந்த முதல் COP கூட்டத்திற்கும்,கடைசியாக துபாயில் நடந்த COP 28 கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இராணுவச் செலவீனம்,1.2 ட்ரில்லியன் டாலரிலிருந்து,2.2 ட்ரில்லியன் டாலருக்கு மேலாக உயர்ந்துள்ளது.

இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் முதல் 100 வணிக நிறுவனங்களின் வருமானம் 597 பில்லியன் டாலர் எனக் கணிசமாக உயர்ந்துள்ளது. உலக பூமி தினம்22.4.24 அன்று கொண்டாடப்படும் வேளையில்,தற்போதைய கள உண்மைகளை கணக்கில் கொண்டால், பூமிக்கு பேரழிவு என்பது பெரும்பாலும் உறுதியாகிறது. 

யாதும் ஊரே; யாவரும் கேளிர்"எனும் கணியன்.பூங்குன்றனாரின் கூற்றை மனதில் நிறுத்தி,பூமியை காக்க ஜனநாயக சக்திகள் மீண்டும் உறுதியேற்க வேண்டும். இல்லையேல்,பூமி/மக்கள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow