"சட்டத்துக்கு கீழ எல்லாரும் சமம்"... கெஜ்ரிவால் வழக்கை தள்ளுபடி செய்து அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அசாதாரண ஜாமீன் வழங்க அனுமதி மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்தது.

புதிய மதுபானக் கொள்கை வழக்கில் மக்களவைத் தேர்தல் நேரத்தில் மார்ச் 21-ம் தேதி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், We the people of India என்ற பெயரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, எந்த மருத்துவ வசதியும் இல்லாமல் அவரை திகார் சிறையில் வைத்திருப்பது, அவர் உயிருக்கே ஆபத்தானது என அதில் கூறப்பட்டிருந்தது.
கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவரது வேலைகளை தொடர அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையின்போது பேசிய நீதிபதி, உயர் பதவியில் இருப்பவருக்கு எதிராக ED உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்த கிரிமினல் வழக்கில், அசாதாரண ஜாமீனை வழங்க முடியாது என தெரிவித்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் எனவும், கெஜ்ரிவாலுக்கு தனிப்பட்ட அதிகாரங்களை வழங்குமாறு மனுதாரரால் இப்படி கோர முடியாது எனவும் அவர் கூறினார். தொடர்ந்து மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
What's Your Reaction?






