வெப்ப அலை வீசப்போகுது.. வெளியே வராதீங்க.. மஞ்சள் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

Apr 27, 2024 - 10:48
வெப்ப அலை வீசப்போகுது.. வெளியே வராதீங்க.. மஞ்சள் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிசா, பீகார், உத்தர பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையும், மேற்கு வங்கத்தை பொறுத்தவரை அதிகளவு வெப்பநிலை வீச வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் மே ஒன்றாம் தேதி வரை வெப்ப அலை வீச  வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. காற்றில் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை இரண்டு ஒரே நேரத்தில் அதிகமாக இருக்கும் வேளைகளில் அசவுகரியமாக உணர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. 
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது.   கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை  பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை 9  இடங்களில்   40.0° செ- க்கு மேல்  பதிவாகியுள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை  ஈரோட்டில் 42.2° செல்சியஸ்,  திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், சேலத்தில் 41.7° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், தர்மபுரியில்  40.7° செல்சியஸ்,  நாமக்கல்லில் 40.5° செல்சியஸ், திருச்சியில் 40.2° செல்சியஸ், திருத்தணி மற்றும் வேலூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ்    பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 38° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 22° –30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  சென்னை மீனம்பாக்கத்தில் 36.8° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.  29.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 30.04.2024 மற்றும் 01.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை  மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழக உள்  மாவட்டங்களில்  அடுத்த ஐந்து  தினங்களில்  அதிகபட்ச   வெப்பநிலை    2°  செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ், இதர  தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

மே 2ஆம் தேதியன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

30.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். இன்று முதல் 30.04.2024 வரை: அடுத்த ஐந்து  தினங்களில் வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow