மதுரை மாணவிக்கு லவ் டார்ச்சர்.. பாய்ந்த போக்சோ சட்டம்.. "ரோமியோ"-வுக்கு சிறை..

Apr 27, 2024 - 10:35
மதுரை மாணவிக்கு லவ் டார்ச்சர்..  பாய்ந்த போக்சோ சட்டம்.. "ரோமியோ"-வுக்கு சிறை..

மதுரையில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரது மகன் அழகுபாண்டி. 19 வயதான இவர் ITI படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்கில் பம்ப் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார்.
 
இந்த நிலையில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் தனது சகோதரியின் தோழிக்கு அழகுபாண்டி காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது இருவீட்டாருக்கும் தெரியவந்த நிலையில் அழகுபாண்டியை கண்டித்துள்ளனர். 

ஆனால், அதனைக் காதில் வாங்காத அழகுபாண்டி, மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மன உளைச்சல் அடைந்த மாணவியின் பெற்றோர் அவரது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி வீட்டிலேயே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் ஊருக்கு சென்ற அழகுப்பாண்டி, அவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறி பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. 
 
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அழகுபாண்டி மீது புகார் அளித்தனர். அதன்  பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அழகுபாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow