டி20 உலகக் கோப்பை இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம் பாகிஸ்தான்: ஐசிசி கடும் எச்சரிக்கை
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியை காண ஆவலுடன் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வங்க தேசம் அணி விலகி விட்டது. இதனால் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாட முடியாது என அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்புக்கு ஐசிசி கடும் எச்சிரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”வெளியுறவுக் கொள்கை தொடர்பான விஷயங்களில் அரசாங்கங்களின் அதிகாரத்தை மதிக்கிறோம். ஆனால், திட்டமிடப்பட்ட போட்டியைத் தவிர்க்குமாறு தேசிய அணிக்கு உத்தரவிடுவது சர்வதேச விளையாட்டின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முரணானது.
ஐசிசி போட்டிகள் நியாயம், நேர்மை மற்றும் போட்டி சமநிலை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. ஒரு அணியுடனான போட்டியில் மட்டும் விளையாட மாட்டேன் என்பது அந்தக் கொள்கைகளை பலவீனப்படுத்தி, நிகழ்வின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து முறையான தகவலுக்காக இன்னும் காத்திருக்கிறோம். நீண்ட கால விளைவுகளை கவனமாக மதிப்பிட்டு பிசிஐ முடிவுகளை எடுக்க வேண்டும்.எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கும் பட்சத்தில் இந்த தொடரின் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கக் கூடிய ரூ. 300 கோடி வருமானத்தை ஐசிசி அளிக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

