கள்ளச்சாராய மரணம்.. காவல்துறையில் கருப்பு ஆடுகள் வைகோ வேதனை.. முதல்வர் பதவி விலக ஓபிஎஸ் வலியுறுத்தல்

காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் மதுவினால் அதிகரிக்கும் சமூக குற்றங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டு இருப்பது வேதனை தருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Jun 20, 2024 - 11:01
கள்ளச்சாராய மரணம்.. காவல்துறையில் கருப்பு ஆடுகள் வைகோ வேதனை.. முதல்வர் பதவி விலக ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரி கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. 
தலைமறைவாகி உள்ள கள்ளச்சாராய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் கள்ளச்சாராய வியாபார போட்டியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளச்சாராயம் ஒழிப்பில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சட்டசபையில் குரல் எழுப்புவோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


இதே போல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கற்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச்சாரயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயத்தால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் மதுவினால் அதிகரிக்கும் சமூக குற்றங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதும் வேதனை தருகிறது. மது இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும். முழு மதுவிலக்கே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று மதிமுக தொடர்ந்து போராடி வருகிறது.

கள்ளச்சாரய மரணங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன். உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றுமாறு மருத்துவத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow