கரூர் கூட்ட நெரிசல் பலி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் ஏற்கனவே மூன்று முறை டெல்லியில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சிபிஐ விசாரணையில் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
விசாரணையின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, கரூரின் முக்கிய அரசியல் பிரமுகர் மற்றும் எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் செந்தில் பாலாஜி சம்பவ இடத்திற்கு அல்லது மருத்துவமனைக்கு நேரில் சென்றது குறித்துக் கூடுதல் தகவல்களைப் பெற சிபிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?

