எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை

ஆளுங்கட்சி சார்ந்தவர்களை விட எதிர்கட்சியினரே அதிக நேரம் சட்டப்பேரவையில் பேசக்கூடிய நேரலை காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்

Nov 21, 2023 - 17:12
Nov 22, 2023 - 13:49
எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை

நாகப்பட்டினம் மீனவ பல்கலைக்கழகத்தில் ஜெயலலிதாவின் பெயர் மாற்றப்பட்டதாக  எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் நாங்கள் பெயர் மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஓர் பிரதான எதிர்க்கட்சித்தலைவர் ஒரு தவறான தகவலை சட்டமன்றத்தில் பதிவு செய்யக்கூடாது என தமிழக சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு
சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த கருத்தரங்கில் கலைஞர் குறித்து பள்ளி மாணவர்கள் திறம்பட பேசிய பேச்சுப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பரிசுகளை வழங்கி பாராட்டி கெளரவித்தார்.

இதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவிக்கையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த் தெரிவித்த கருத்து குறித்த என்பது அது அவருடைய தனி கருத்து. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றாமல் திருப்பி அனுப்பியதில்,ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என பதிலளித்தார்.

மேலும் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் தராதது குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது.சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச உரிய அனுமதி கொடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விற்கு, சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுகிறது. தனி தீர்மானம் என்றால் அஜெண்டாவில் தான் பேச வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அஜெண்டா பெற்றவுடன் இது குறித்து நான் பேச வேண்டும் என தீர்மானங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் அப்படி எழுதி தராமல்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஜெண்டா அல்லாது பொருள் குறித்து பேசியதுதான் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளது என தெரிவித்தார்.

மேலும் நாகப்பட்டினம் மீனவ பல்கலைக்கழகத்தில்  ஜெயலலிதாவின் பெயர் மாற்றப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் கருத்து தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.ஆனால் நாங்கள் எந்த பெயர் மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஆனால் ஓர் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தவறான தகவலை சட்டமன்றத்தில் பதிவு செய்யக்கூடாது,அவ்வாறு சட்டமன்றத்தில் தவறான தகவல்களை பதிவு செய்து விட்டு வெளிநடப்பு செய்திருக்கின்றார்கள். அவர்கள் மீது  பேரவை விதிகளின்படி  நடவடிக்கை எடுக்கலாம்.

ஆளுங்கட்சி சார்ந்தவர்களை விட எதிர்கட்சியினரே அதிக நேரம் சட்டப்பேரவையில் பேசக்கூடிய நேரலை காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எதிர்கட்சியினர்தான் அதிக நேரம் பேசி இருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச்செயலாளர் சீனிவாசன்,
காஞ்சிபுரம் எம்.பி., செல்வம்,உத்திரமேரூர் எம்.எல்.ஏ .சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow