நாளை நீட் மறுதேர்வு: சென்னை தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு
நீட் மறு தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னையில் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மூன்றாம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது நடத்தப்பட்ட நிலையில் அதில் வினாத்தாள் கசிவு மற்றும் சில முறைகேடுகள் நடந்ததாக கூறி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நீட் மறு தேர்வானது நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக தேர்வு மையங்களில் நடந்து வருகிறது.
சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதக்கூடிய நிலையில் 2.5 லட்சம் பணியாளர்கள் மற்றும் 15 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஒத்திகையானது இன்று காலை சில மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வினாத்தாளை கொண்டு வருவதும் அதேபோன்று விடைத்தாளை கொண்டு செல்லக்கூடிய பணியில் ஈடுபட இருப்பதாகவும், அதேபோல மாணவர்கள் தேர்வு மையத்தில் எப்படி வர வேண்டும், பணியாளர்கள் எப்படி கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட ஒத்திகை பயிற்சியானது நடைபெற்று வருகிறது.
சென்னையை பொருத்தவரையில் 38 தேர்வு மையங்களில் நாளை நீட் மறு தேர்வானது நடைபெற உள்ளது. இந்த தேர்வு மையங்களில் பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மைய வளாகங்கள் முழுவதிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ச்சியாக கண்காணித்து உள்ளனர். அதேபோல தேர்வு அறையிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. நாளை மதியம் 2 மணி முதல் 5.15 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?













