அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளராக களமிறங்கும் சீமான்: திமுக போடும் அரசியல் கணக்கு
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் பொதுவேட்பாளராக நாம் தமிழர் கட்சி சீமானை களமிறக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்று, பிற கட்சி உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதே போன்று விராலிமலை எம்எல்ஏ பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியும் காலியாக உள்ளது. இதனால் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது தவெகவிற்கு தனிபெருபான்மை இல்லை. 6 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது. இதனால், இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக திமுக, அதிமுக மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பில் சீமானை ஒரு தொகுதியில் பொதுவேட்பாளராக நிற்க வைக்க திமுக காய் நகர்த்தி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம், ஆலங்குளம், காரைக்குடி ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் அதிக வாக்குகள் பெற்றது. அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் சிவசங்கரன் 14 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்றார்.
இந்த தொகுதியில் நாடார் சமுதாய வாக்குகளும் அதிகளவு உள்ளது. இதனால், சீமான் நேரடியாக களமிறங்கினால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு இருக்கும் என்று திமுக கணக்கு போட்டுள்ளது. அதுமட்டுமின்றி சீமான் வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்தால் முதல்வர் விஜய்க்கு அவரது பேச்சு மூலம் கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என திமுக கணக்கு போடுகிறது.
What's Your Reaction?













