அடுத்தடுத்து அதிரடி... கள்ளக்குறிச்சிக்கு விரையும் விஜய்... உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் சந்திப்பு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 37 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த விஜய், தற்போது கள்ளக்குறிச்சி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jun 20, 2024 - 18:13
Jun 20, 2024 - 18:14
அடுத்தடுத்து அதிரடி... கள்ளக்குறிச்சிக்கு விரையும் விஜய்... உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் சந்திப்பு

சென்னை: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், பொதுநிகழ்ச்சிகளிலும் அடிக்கடி பங்கேற்று வருகிறார். அதேபோல், அரசியல் ரீதியாக அறிக்கை வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தி 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய், அரசின் நிர்வாகத் திறன் பற்றியும் காட்டமாக விமர்சித்திருந்தார்.   

அதன்படி விஜய் வெளியிட்ட அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனக் கூறியிருந்தார். மேலும், கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என நேரிடையாக குற்றம்சாட்டியிருந்தார். 

இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் எனவும் விஜய் வலியுறுத்தியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. விஜய்யின் அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம் பற்றி இதுவரை அவரது ரசிகர்களே குழப்பத்தில் இருந்தனர். காரணம், மத்திய அரசையோ அல்லது மாநில அரசையோ விஜய் வெளிப்படையாக விமர்சிக்காமல் இருந்து வந்தார். ஆனால், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விஜய்யின் அறிக்கை கொஞ்சம் ஹாட்டாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதேபோல் திமுகவுக்கு எதிரான வலிமையான கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை வளர்ப்பது தான் விஜய்யின் நோக்கமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், அறிக்கையோடு நிற்காமல் தவெக தலைவர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தே கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி செல்லும் விஜய், கள்ளச் சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளாராம். மேலும், தொடந்து சிகிச்சை எடுத்து வருபவர்களின் உடல் நலம் குறித்தும் நேரில் சென்று விசாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிவாரணம் வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் கள்ளக்குறிச்சி பயணம் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow