கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம்.. அதிகாரிகள் மீது மட்டும் பழி.. எச்சரிக்கும் அண்ணாமலை

திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் நடந்துள்ள இந்த துயர சம்பவத்தில், அதிகாரிகள் மீது மட்டும் பழி போட்டு, பிரச்சினையை மூடி மறைத்து விடலாம் என்ற எண்ணத்தில் திமுக இருந்தால், அதைப் பார்த்துக் கொண்டு தமிழ்நாடு பாஜக சும்மா இருக்காது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Jun 20, 2024 - 18:17
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம்.. அதிகாரிகள் மீது மட்டும் பழி.. எச்சரிக்கும் அண்ணாமலை

கள்ளக்குறிச்சி:கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உயிருக்கு மதிப்பளித்து, தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் முதல்கட்டமாக ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தள பதிவில், தமிழகத்தையே அதிர்ச்சியிலும் வேதனையிலும் தள்ளியிருக்கிறது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச்சாராய இறப்புகள். மகனை இழந்துள்ள பெற்றோர், கணவனை இழந்துள்ள பெண்கள், தந்தையை இழந்துள்ள குழந்தைகள் என, கள்ளக்குறிச்சியில் கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பத்தினருக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தத் துயரத்தில் இருந்து மீண்டு வர அனைவருடனும் தமிழ்நாடு பாஜக உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தேன்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவாக நலம்பெற, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் திரு. A.G.சம்பத் அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவர் திரு. அருள் ஆகியோரின் முன்னேற்பாட்டில், வீடற்றவர்களுக்கு வீடு, குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட மத்திய அரசின் நலத்திட்டங்களில், இந்த குடும்பத்தினர் பலனடையும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முழுக்க முழுக்க திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் நடந்துள்ள இந்த துயர சம்பவத்தில், அதிகாரிகள் மீது மட்டும் பழி போட்டு, பிரச்சினையை மூடி மறைத்து விடலாம் என்ற எண்ணத்தில் திமுக இருந்தால், அதைப் பார்த்துக் கொண்டு தமிழ்நாடு பாஜக சும்மா இருக்காது என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கள்ளச் சாராயமும், திமுகவின் அடிமட்டத்தில் இருக்கின்ற தலைவர்களும் பின்னிப்பிணைந்திருக்கிறார்கள். இன்று கள்ளக்குறிச்சிப் பகுதியில், காவல் துறையினர் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. அந்த வீட்டில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளும் இருக்கிறது. 

இந்த சம்பவம் ஏதோ கிராமப்புறத்திலோ அல்லது மலைப்பகுதியிலோ நடைபெறவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மையப்பகுதியில் நடந்துள்ளது.
காவல் நிலையத்தில் இருந்து 150 மீட்டர், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்வளவு பக்கத்தில் இருக்கின்ற பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. மருத்துவர்களிடம் பேசும்போது, யாரெல்லாம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள், இரண்டு மூன்று நாட்களாக அவர்கள் கள்ளச் சாராயம் அருந்தியிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். 

புதன்கிழமை காலை 6.10 மணிக்கு முதல் உயிர் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வசாதரணமாக கள்ளச்சாரயம் இந்தப் பகுதியில் புழங்கியிருப்பது தெரியவருகிறது. எனவே, தமிழக பாஜக இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். காரணம், மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்தபோதே, அச்சம்பவத்தில் தொடர்புடைய மருவூர் ராஜாவுக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தோம். அந்த தொடர்பை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தோம். ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்தமுறை தமிழக முதல்வர் இதுதான் கடைசி மரணம் என்று கூறினார். ஆனால், கள்ளக்குறிச்சியில் இன்று 38ஐ தாண்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 140க்கு மேற்பட்டவர்கள் இந்த மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். நான் பார்த்தவரையில், 15 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், முதல்வர் வருத்தம் தெரிவித்து ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

குறைந்தபட்சம், தார்மிக பொறுப்பேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் 18லிருந்து 22 சதவீதமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்துள்ளது. எனவே, முதல்வர் தார்மிக பொறுப்பேற்று மதுவிலக்கு கொள்கையை அமைக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் உயிர்களுக்கு மதிப்புக் கொடுத்து முதல் கட்டமாக தமிழகத்தில் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக, நாளை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஒரு அரசு டாஸ்மாக் கடைகளை நடத்துவதற்கு தார்மிக உரிமை இல்லை. திமுக எம்பிக்கள் உள்ளிட்ட சிலர் நடத்தும் சாராய ஆலைகளின் நலனுக்காக டாஸ்மாக் நடத்தப்படுகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow