உண்மை சரிபார்ப்பு குழு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
காவல்துறைக்கு உதவத்தானே அமைக்கப்பட்டுள்ளது
![உண்மை சரிபார்ப்பு குழு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி](https://kumudam.com/uploads/images/202311/image_870x_65589d8817dfb.jpg)
தவறான செய்திகளை கண்டறிவதற்காக தமிழக அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழு, ஒரு தணிக்கை அமைப்பு தானே? இதில் என்ன தவறு? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
இந்த குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்கக் கோரி அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட கோவையை சேர்ந்த மருதாச்சலம் என்பவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை கண்காணிப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டுமென தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், சமூக வலைதளங்களில் தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பகிரப்படுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க சமூக ஊடக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்ததை ஏற்று, கடந்த மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மற்றொரு வழக்கை முடித்துவைத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால், காவல்துறையை விட்டுவிட்டு "உண்மை சரிபார்ப்பு குழு" என அரசு அமைத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டும் அல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.காவல்துறையின் வரம்பிற்கு வெளியே இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்து உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால்,அக்டோபர் 6ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்கவும், திட்ட இயக்குனராக ஐயன் கார்த்திகேயன் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இதுசம்பந்தமாக மத்திய அரசு ஏற்கனவே 2021 விதிகள் வகுத்துள்ளது.தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரி பார்ப்பு குழு தகவல் தொழில் நுட்ப சட்ட விதிகளுக்கு முரணானது என்றார்.
மேலும், உண்மை சரிபார்ப்பு குழுவை அமைக்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. இது மாநில அரசின் கையில் உள்ள ஆபத்தான ஆயுதம் எனவும் குறிப்பிட்டார்.அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பொய் செய்திகள் பரவுவதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறை தானே? இதில் என்ன தவறு ? காவல்துறைக்கு உதவத்தானே அமைக்கப்பட்டுள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார்.
அப்போது தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குழுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,பீகார் தொழிலாளர்கள் தொடர்பான தவறான தகவல்கள் பரவியது குறித்து சுட்டிகாட்டினா்.குழுவில் தகுதியான நபரை தான் அரசு நியமித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, மத்திய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த வழக்கின் முடிவை தெரிந்து கொள்ளலாம் எனக் கூறி, அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)