பிரபாகரனின் மகள் துவாரகாவின் உரை உலக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும்-பழ.நெடுமாறன் பேட்டி

பிரபாகரன் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இள வேங்கை இப்போது உறுமியிருக்கிறது; சின வேங்கை விரைவில் வந்து உறுமும்.

Nov 28, 2023 - 12:39
Nov 28, 2023 - 14:14
பிரபாகரனின் மகள் துவாரகாவின் உரை உலக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும்-பழ.நெடுமாறன் பேட்டி

பிரபாகரனின் மகள் துவாரகாவின் உரை உலக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் என உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளையொட்டி, தஞ்சை விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்வில் ஈழ போரில் உயிரிழந்த ஈகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா இணையவழி மூலம் உரையாற்றினார்.இந்த நேரலை தஞ்சாவூர் விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன்,“தமிழின தேசியத்தலைவர் பிரபாகரனின் புதல்வி துவாரகா மாவீரர் நாள் உரையாற்றியுள்ளார்.இவரது உரை, பிரபாகரன் எத்தகைய திட்டத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்கான ஆயுதப் போராட்டம் மெய்ப்பிக்காவிட்டாலும், அவர்களுடைய அரசியல் போராட்டம் தொடரும்.அதற்கு உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் உதவ முன் வர வேண்டும் என துவாரகா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.அது மட்டுமல்லாமல், சிங்கள மக்கள் எதிரிகள் அல்லர்; நாங்கள் ஒரு நாளும் அவர்களை எதிரிகளாகக் கருதவில்லை. சிங்கள இனவெறியர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தங்களுடைய தன்னலத்துக்காக சிங்கள மக்களிடையே வெறியை ஊட்டி, எங்களுக்கு எதிராக ஏவிவிட்டனர். மற்றபடி நாங்கள் ஒருபோதும் சிங்கள மக்களைக் கெடுத்ததில்லை. எனவே, அரசியல் போராட்டம் தொடரும்; அதற்கு உலகத் தமிழர்கள் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபாகரன் உள்பட அவரது குடும்பமே அழிந்து போய்விட்டது என செய்திகள் வந்தன.இப்போது அவரது புதல்வி வந்து உலக மக்களிடையே பகிரங்கமாக பேசியுள்ளார். இதை அவராகவே செய்திருக்க முடியாது.இதன் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இள வேங்கை இப்போது உறுமியிருக்கிறது; சின வேங்கை விரைவில் வந்து உறுமும்.

துவாரகாவின் உரையைக் கேட்ட மக்கள் அனைவருக்கும் எழுச்சியை ஏற்படுத்தும்.எல்லோருக்கும் நம்பிக்கையும், புத்துணர்வும் நிச்சயமாக உருவாகும். மீண்டும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு பெருகும். உலக அளவில் ஏறத்தாழ 50 நாடுகளுக்கும் மேலாக தமிழர்கள் வாழ்கின்றனர்.அவர்களுக்கு இந்த தாய்த் தமிழகம்தான் பாதுகாப்பு.

எனவே, தாய்த் தமிழகத்தில் எத்தனைக் கட்சிகள், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் தமிழர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு நின்றால், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு ஏற்படும். எனவே, உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்றார் நெடுமாறன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow