யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்..  முதலிடம் பிடித்து அசத்திய ஆதித்யா ஸ்ரீவஸ்தவா.. வாழ்த்திய மோடி

Apr 16, 2024 - 17:17
Apr 16, 2024 - 17:44
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்..  முதலிடம் பிடித்து அசத்திய ஆதித்யா ஸ்ரீவஸ்தவா.. வாழ்த்திய மோடி

நாடு முழுவதும் 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு குடிமைப் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்று அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுவது நடைமுறை. 

அதன்படி, 2023-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி முதல்நிலைத் தேர்வும், செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் நேர்காணல் தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அதன் தேர்வு முடிவுகள் இன்று (16-04-2024) வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1,143 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 1,016 பேர் நியமனத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வில் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடமும், அனிமேஷ் பிரதான் 2-வது இடமும், டோனுரு அனன்யா 3-வது இடமும், சித்தார்த் ராம்குமார் 4-வது இடமும், ருஹானி 5-வது இடமும் பிடித்துள்ளனர். மேலும், தேர்வர்கள் இறுதித் தேர்வின் முடிவுகளை https://upsc.gov.in/ மற்றும் www.upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த நிலையில், மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “2023ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பலன் கிடைத்துள்ளது. இது பொது சேவையில் நம்பிக்கைக்குரிய வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அவர்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், தேர்வில் வெற்றியடையாத மாணவர்கள் துவண்டு விடாத வண்ணம் அவர்களுக்கு பிரதமர் மோடி ஊக்கமும் அளித்துள்ளார். “சிவில் சர்வீசஸ் தேர்வில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, பின்னடைவுகள் கஷ்டமாக இருக்கும். ஆனால் அது உங்கள் பயணத்தின் முடிவு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அதையும் தாண்டி பிரகாசிக்கக்கூடிய உங்கள் திறமைகளுக்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் முன்னால் உள்ள எண்ணற்ற சாத்தியக்கூறுகளை ஆராயுங்கள். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow