ஆடி அமாவாசை ஏன் சிறப்பு? தேவலோக பிரதோஷம், ஆடி அமாவாசை சிறப்புகள்!
ஆடி மாதம் என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே அம்மன் மாதம் என்று சொல்லி விடுவீர்கள். அது மட்டும்தான் ஆடிக்குப் பெருமையா? கொஞ்சம் தேடிப் பார்த்துத் தெரிந்துகொள்வோம், வாருங்கள்.
தேவலோக பிரதோஷம்
பூவுலகில் நாமெல்லாம் பிரதோஷத் தின்போது தெய்வங்களை வணங்குவது தெரிந்த விஷயம்தான். தேவலோகத்தின் பிரதோஷம் எப்போது தெரியுமா?
பூவுலகின் ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒருநாள் என்று சொல்வார்கள். அந்த வகையில் தேவர்களின் உலகில் பகல் பொழுது முடிந்து, மாலை வேளை தொடங்கும் நேரம்தான், ஆடிமாதம் சூரியனின் தேர்ப்பாதை வடக்கில் இருந்து தெற்காகத் திரும்பும் தட்சிணாயண புண்யகாலம் தொடங்கும் இந்த சமயம்தான், தேவலோகத்தின் பிரதோஷம் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.
அதாவது தேவர்கள் யாவரும் தெய்வங்களை வழிபடும் காலகட்டம் இது. அதனால், நாமும் அந்த சமயத்தில் கடவுளரை ஆராதித்தால், கணக்கற்ற நற்பலன்கள் கிட்டும். இதை உணர்ந்துதான், ஆடி மாதத்தை பீட மாதம் என்று சொல்லி (சுவனமாகப் படிக்கவும் பீடை மாதம் இல்லை), அந்த மாதத்தில் மாதத்தில் பிற விஷயங்களை ஒதுக்கச் சொன்னார்கள் நம் முன்னோர்.
கடக சங்கராந்த
பொங்கல் பண்டிகை வரக்கூடிய தை மாதத்தின் முதல் நாளை, மகர சங்கராந்தி தினம் என்பார்கள் தெரியும் அது என்ன கடக சங்கராந்தி?
இதற்கான பதில், ஆடி மாதப் பிறப்பு தினம்தான் கடகசங்கராந்தி என்பதுதான். ஜோதிட ரீதியாக சூரியன் எந்த மாதத்தில் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியின் பெயரையே அந்த மாதத்திற்கும் கொள்வது மரபு. அந்த வகையில் சூரியன் ஆடி மாதத்தில் கடகராசியில் இருப்பார். மாதப் பிறப்பினை சங்கராந்தி என்று சொல்வார்கள். கடகராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினம் என்பதால் ஆடி மாதப் பிறப்பினை கடக சங்கராந்தி என்றார்கள்.
ஆடி மாதம் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். பருவகால மாற்றம் தொடங்கும் என்பதால், கிருமிகள் பரவுதல் அதிகம் இருக்கும். எனவேதான் ஆடியின் தொடக்கம் முதலே நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும் வேப்பிலை,மஞ்சள்,எலுமிச்சை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். மழைக்காலத் தொடக்கம் என்பதால், பயிர்கள் செழித்து வளர மழை தெய்வமான மாரி அன்னையையும் வருணனின் அருளையும் ஆடி மாதத்தில் வேண்டினார்கள். எளிய உணவான கூழினைக் குடிப்பது, உடல்நலத்தைக் காத்து, உழைத்திட உரம் சேர்க்கும் அதனாலேயே அதனை ஆடிப் பண்டிகையுடன் பிணைத்து வைத்தார்கள்.
ஆடிச் செவ்வாய்
ஆடிச்செவ்வாய் தேடிக்குளி, அரைத்த மஞ்சளை பூசிக்குளி என்பார்கள். ஆடிமாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், மஞ்சள் தெய்த்து நீராடிவிட்டு உங்கள் இஷ்ட அம்மனைக் கும்பிடுங்கள். மஞ்சள்,குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை ஏழைப் பெண்களுக்குக் கொடுங்கள். இயன்ற அளவு பிறர் பசியாறிட கூழ் அளியுங்கள். |வாழ்வில் நிச்சயம் பல நன்மைகளை அறுவடை செய்திட எல்லா தெய்வங்களுமே அருள்வார்கள்.
ஆடி அமாவாசை
அமாவாசை என்றாலே பித்ருக்களை வணங்குவதற்கு உரிய நாள் என்பது தெரிந்ததுதானே? இதில் ஆடி மாத அமாவசை மிகமிகச் சிறப்பானது. ஆடி அமாவசை தினத்தில் மாத்ரு காரகனான சந்திரனும் பித்ரு காரகனான சூரியனும் கடகராசியில் ஒன்றாக இருப்பார்கள். சுடகம் சூரியனுக்குப் பகைவீடு, சந்திரனுக்கு உச்ச வீடு ஈசனை சூரியன் என்றும் அம்பிகையை சந்திரன் என்றும் கூறுவது உண்டு.
அதாவது உஷ்ணமாகிய சிவனை விட குளிர்ச்சியான அம்பிகை அதிக ஆற்றலுடன் இருக்கும் மாதம் ஆடி மாதம். அதனால்தான் ஆடிமாதத்தில் அம்மனுக்கு ரொம்ப விசேஷம். சூரியனின் ஆற்றல் குறையும்போது, கால நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். எனவே கிருமிகளின் தொற்று பரவவும் வாய்ப்பு உண்டு. அதனால்தான், ஆடி மாதத்தில் கிருமி நாசினிகளான வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை அம்மன் வழிபாட்டோடு சேர்த்துச் சொன்னார்கள்.
சரி, ஆடி அமாவாசை தினத்தில் என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம். முதலாவது விஷயம் அவரவர் முன்னோருக்கு நீர்க்கடன் செய்வது. இது ரொம்பவே முக்கியம். இதனால் முன்னோரின் ஆசி கிடைத்து, திருமணம், குழந்தைபாக்யம் முதலானவற்றில் உள்ள தடைகள் நீங்கும்.
முன்னோருக்கான வழிபாடுகளை முறையாகச் செய்து முடித்த பின்னர், அன்றைய தினம் மாலை வேளையில் அவரவர் வழக்கப்படி குல தெய்வம், இஷ்டதெய்வத்தை கும்பிடுவது சிறப்பு. இயன்ற உணவு, நீர், ஆடை போன்றவற்றை தானமளிப்பது, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது போன்றவை பலமடங்கு புண்ணியம் சேர்க்கும்.
ஆடி அமாவாசை தினத்தன்று நாம் செய்யும் தர்ப்பணத்தால் பித்ருக்களின் பாவங்கள் நீங்கி அவர்கள் புண்ணிய உலகை அடைகிறார்கள். அதனால், இதனைத் தவறவிடக்கூடாது என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே சொன்ன வாக்கு கருட புராணம், ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திலம் என்கிற எள் கலந்த நீரினால் தர்ப்பணம் செய்வது, அவர்களை மகிழ்விப்பதோடு, அப்படிச் செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், வெற்றி, வம்சவிருத்தி கடன் நிவாரணம் எதிரி பயம் நீங்குதல் பூர்வீக சொத்து சேர்க்கை என சகலவிதத்திலும் நன்மை சேரும் என்கிறது.
இந்தப் பராபவ வருடத்தில் ஆடி மாதம் 27 ஆம் தேதி (1282026) அன்று ஆடி அமாவாசை. அன்றைய தினம் அவரவரால் இயன்ற வகையில் பித்ரு கடன்களைச் செய்யுங்கள். முன்னோர் ஆசியால் நீங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள்.
What's Your Reaction?





