விஜய் இந்திய பிரதமர் என்ன.. அமெரிக்க ஜனாதிபதியே ஆகட்டும் – அன்பில் மகேஷ் பேச்சு..!

முதலமைச்சர் விஜய், தேர்தல் வாக்குறுதிகளை முதலில் முழுமையாக நிறைவேற்றிவிட்டு, அதன்பிறகு இந்தியாவின் பிரதமராகவோ அல்லது அமெரிக்காவின் ஜனாதிபதியாகவோ ஆகட்டும் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார்.

Aug 28, 2026 - 12:00
விஜய் இந்திய பிரதமர் என்ன.. அமெரிக்க ஜனாதிபதியே ஆகட்டும் – அன்பில் மகேஷ் பேச்சு..!

திருச்சியில், முன்னாள் அமைச்சர் அன்பில் பொய்யாமொழியின் 27-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

சட்டமன்றம் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியினர் நேரடியான பதில்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக விவாதத்தை வேறு திசைக்கு கொண்டு செல்வது சரியான அணுகுமுறை அல்ல என்றும் விமர்சித்தார்.

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் ஆரம்பத்தில் அனுபவக் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த நிலை எத்தனை நாட்களுக்கு தொடரும் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்தார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களின்போது, சம்பந்தப்பட்ட துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து முதலில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேகதாது அணை விவகாரத்தில் அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துகளை தெரிவிப்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். கர்நாடகாவில் மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது போல், தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க இங்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், பெண்களுக்கு ரூ.2,500, படித்த இளைஞர்களுக்கு ரூ.4,000, மீனவர்களுக்கு ரூ.2,000 இடைக்கால நிதி உள்ளிட்ட வாக்குறுதிகளின் தற்போதைய நிலை என்ன எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், இலவச சிலிண்டர் திட்டம் தொடர்பாக முதலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேர்தலுக்கு முன்பு மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே அரசின் முதல் கடமை எனக் கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “முதலில் முதலமைச்சராக வழங்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றட்டும். அதன் பிறகு இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்றாலும், அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்றாலும் ஆகட்டும்” என விமர்சித்தார். 

இதனிடையே, அடுத்த பிரதமர் யார் என்ற தேர்வில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால், விஜய்யின் அடுத்த இலக்கு பிரதமர் பதவியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow