கலாமின் நிழல்.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து (74 வயது) திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது இறுதிச்சடங்கு மதுரையில் நடைப்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Jun 16, 2025 - 10:31
Jun 16, 2025 - 10:32
கலாமின் நிழல்.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்
former isro scientist Nellai S. Muthu

திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1951 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி, திருநெல்வேலியில் பிறந்த முத்துவின் தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. தாயார் பெயர் சொர்ணத்தம்மாள். வேதியியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு பயின்ற நிலையில், இவருக்கு இந்தியாவின் விண்வெளித்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக சேவையாற்றியுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இவர் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

விண்வெளி தொடர்பான விஷயங்களை அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் இவரது எழுத்துநடை அமைந்திருக்கும். இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது:

1. விண்வெளி 2057 என்கிற புத்தகத்திற்காக 2000-ஆம் ஆண்டு சிறந்த நூலாசிரியர் விருது சு.முத்துவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2. அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு- 2004 ஆம் ஆண்டு 
3. ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்- 2005 ஆம் ஆண்டு
4. அறிவியல் வரலாறு- 2010 ஆம் ஆண்டு

மறைந்த விஞ்ஞானி நெல்லை எஸ். முத்து 1963 முதல் 1980 வரை டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுடன் 40 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியுள்ளார். டாக்டர் கலாம் இஸ்ரோவில் திட்ட இயக்குநராக இருந்தபோது, ​​முத்து 1973 இல் ஒரு விஞ்ஞானியாக பணி புரிந்தார். டாக்டர் கலாம் டி.ஆர்.டி.ஓ.வுக்கு மாறிய பிறகும் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர். முத்து கலாம் குறித்து நான்கு புத்தகங்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார்.

அப்துல் கலாமின் புகழ்பெற்ற “இந்தியா 2020 தொலைநோக்குப் பார்வை” புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தார் முத்து. மேலும் டாக்டர் கலாமின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் நெல்லை சு.முத்து திகழ்ந்தார்.

தன் வாழ்நாளில் அறிவியல்,சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழி பெயர்ப்பு என 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை சு.முத்துவின் மறைவு இலக்கிய உலகத்திற்கு பெரும் இழப்பு என சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow