"இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்கிறது" - முதலமைச்சர் பெருமிதம்
சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி சார்பில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கிப் பெரும் பங்கு வகிப்பதாகவும், உலக வங்கியின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
ஏழைகளுக்கான குடியிருப்புகளை உருவாக்க 190 மில்லியன் டாலர் கடனை உலக வங்கி கொடுத்துள்ளதாகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கியுடன் வெறும் நிதி மட்டுமல்லாமல் நிபுணத்துவத்தையும் பெற்று தமிழகம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கே தமிழ்நாடு லீடர் என்ற நிலையை அடைந்திருக்கிறோம். தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் உதவி உள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு உள்ளது. சாலை மேம்பாடு, நீர் பாசனம் போன்ற திட்டங்களிலும் உலக வங்கி உதவி இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது என் கனவு. மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனில் சிறந்த முன்னெடுப்புகளை தமிழ்நாடு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே பெண்கள்தான் எனவும், விவசாயம் அல்லாத, வளர்ந்து வரும் துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 185 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி உதவியுடன் WE-SAFE எனும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் கூறினார். மேலும், இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
What's Your Reaction?






