குழந்தை வரம் தரும் கூவாகம் கூத்தாண்டவர்.. சித்திரைத் திருவிழாவில் கூடும் திருநங்கைகள்

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது.

Mar 29, 2024 - 13:10
குழந்தை வரம் தரும் கூவாகம் கூத்தாண்டவர்.. சித்திரைத் திருவிழாவில் கூடும் திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா, ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

கூத்தாண்டவர், நினைத்ததை நிறைவேற்றுவதால், பக்தியுடன் ஆண்டுதோறும் விழா எடுத்து அவரை வழிபடுகின்றனர். இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 

இதனைத் தொடர்ந்து, 10ஆம் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ம் தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், ஏப்ரல் 17ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலாவும்,  21ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம் நடைபெறுகிறது. 

22ஆம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி, ஏப்ரல் 23ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை, இந்தியா முழுவதும் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் வரும் திருநங்கைகள், கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டு, புதுமணப்பெண்களை போல தங்களை அலங்கரித்துக்கொள்வார்கள்.

மகாபாரத போரில் அரவான் களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் சித்திரை பெருவிழாவின் 16ஆம் நாளில், அழுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 24ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. முதல்நாள் இரவு தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள், தாலி அறுத்து வெள்ளைப்புடவை அணிந்து கொண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள். ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. 

உறுமைசோறு (பலிசாதம்) படையலில் படைக்கப்படும் பலகாரங்களையும், உணவையும் வாங்கி சாப்பிட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், கொரட்டூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow