”என்னுள் நிழலாடுகின்றன..” பாப்பம்மாள் மரணம்.. கமல்ஹாசனின் உருக்கமான பதிவு

இயற்கை விவசாயத்தில் சாதித்துக் காட்டிய பாப்பம்பாள் பாட்டி உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன்.

Sep 28, 2024 - 15:55
”என்னுள் நிழலாடுகின்றன..” பாப்பம்மாள் மரணம்.. கமல்ஹாசனின் உருக்கமான பதிவு

இயற்கை விவசாயத்தில் சாதித்துக் காட்டிய பாப்பம்பாள் பாட்டி உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன்.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 108 வயதான இவர் ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். இதனால் இவர் வேளாந்துறையில் முன்னோடியாக கருதப்பட்டார். 

அதுமட்டுமல்லாது இயற்கை விவசாயத்தில் இளைய சமூகத்தினரை வளக்க வேண்டும் என்பதற்காக இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைப்பில் இருந்தார். தனது தள்ளாத வயதிலும் 2.5 ஏக்கர் நிலத்தில் ஒவ்வொரு நாளும் வேலை செய்த இரும்பு பெண்மணி தான் பாப்பம்மாள்.

அவரது இந்த சாதனையை பாராட்டி அவருக்கு இந்தியாவில் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2021ம் ஆண்டில் வழங்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடியே இவரின் காலில் விழுந்து வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய நிலங்களில் மட்டுமல்லாது அரசியலிலும் கால்பதித்த பெண் தான் பாப்பம்மாள். இவர் 1959ம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சியின் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாயத்து ஒன்றியத்தில் கவுன்சிலராகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், திமுகவின் உறுப்பினராகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர ரசிகையாகவும் இருந்துள்ளார்.

இவர் வயது முதிர்ந்த காலத்திலும் சுறுசுறுப்பாக இருந்ததற்கான காரணம், இவர் தினமும் ஆட்டிறைச்சி பிரியாணி உண்பார் என்று தகவல்கள் வெளியானது. மேலும் இவர் தட்டில் உண்வருந்தமாட்டார் எனவும் சாப்பிட்டால் வாழை இலையில் தான் சாப்பிடும் பழக்கத்தையும் கொண்டிருந்தார் பாட்டி. அதே போல காலம் மாறினாலும், தன்னுடையை பழக்கத்தை மாற்றிக்கொள்ளாத பாப்பம்மாள் டீ, காபி அருந்தியதே இல்லையாம். இவர் சுடுநீர் மட்டுமே அருந்தும் பழக்கத்தையும் கொண்டிருந்தார்.

இப்படி 109 வருடங்கள் இரும்பு பெண்மணியாக இருந்து விவசாயத்தில் சாதித்துக் காட்டிய பாப்பம்பாள் பாட்டி வயது முதிர்வு காரணமாக இன்று (27 செப்) உயிரிழந்தார்.

பாப்பம்மாள் பாட்டிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இயற்கை விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோயம்புத்தூர் பாப்பம்மாள் அவர்கள் 108 வயதில் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழாவில் அவரைச் சந்தித்து உரையாடி உத்வேகம் பெற்ற கணங்கள் என்னுள் நிழலாடுகின்றன. 

அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். பாப்பம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow