மெட்ரோ ட்ரெயின்ல போறீங்களா.. பார்க்கிங் கட்டணம் உயர்வு.. மே 1 முதல் புது ரூல்ஸ் 

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட கட்டணத்தை சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை அமலுக்கு வருகிறது. 

Apr 30, 2024 - 18:46
மெட்ரோ ட்ரெயின்ல போறீங்களா.. பார்க்கிங் கட்டணம் உயர்வு.. மே 1 முதல் புது ரூல்ஸ் 

சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங்கை மட்டும் பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் 6 மணி நேரத்திற்கு 20 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 30 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு மேல் 40 ரூபாயும், சேவை நேரத்தை கடந்தால் 50 ரூபாயும் கட்டணமாக செலுத்தி வருகின்றனர்.

இதேபோல் 4 சக்கர வாகனங்களை நிறுத்துபவர்களிடம் 6 மணி நேரத்திற்கு 30 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 40 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு மேல் 50 ரூபாயும், சேவை நேரத்தை கடந்தால் 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. 

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

அதன்படி கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வசதி, விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ தியாகராய கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ஆகிய 6 மெட்ரோ இரயில் நிலையங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய வண்ணாரப்பேட்டை, நந்தனம், எழும்பூர் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ஆகிய 4 மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இட வசதி இல்லாத காரணத்தினால் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ இரயில்களில் பயணிக்காமல் வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளதால், திருவொற்றியூர், திருவொற்றியூர் தேரடி, காலடிப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, நந்தனம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், விமான நிலையம், அசோக் நகர், திருமங்கலம், மற்றும் எழும்பூர் மெட்ரோ என 18 மெட்ரோ இரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களில் மெட்ரோ இரயிலில் பயணம் செய்யாதவர்கள் அல்லது 15-க்கும் குறைவான பயணம் செய்தவர்களுக்கு அரும்பாக்கம் மெட்ரோ மற்றும் பரங்கி மலை மெட்ரோ இரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள மற்ற மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தில் எவ்வித மாற்றம் இல்லை. மேலும் விவரங்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் https://Chennaimetrorail.org/parking-tariff இணையதளத்தைப் பார்க்கவும் என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow