சென்னையில் செயின் பறிப்பு சம்பவம்: விமானத்தை நிறுத்தி.. ரயிலை துரத்தி.. அதிகாலையில் என்கவுண்டர்
சென்னையில் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் இன்று அதிகாலை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (25.03.2025)-ம் தேதி இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டையில் காலை சுமார் 06.00 மணிக்கு செயின் பறிப்பில் ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் சென்னை பெருநகரம் முழுவதும் 56 இடங்களில் தீவிரவாகன சோதனைகள் நடைபெற்றது.
மேலும் CCTV கேமராக்களை ஆய்வு செய்ததில் இருந்தும் புலன் விசாரணையில் இருந்தும் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் வெளிமாநிலத்தை சேர்ந்த நபர்கள் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விமான நிலையம் மற்றும் இரயில் நிலையங்களில் தீவிரவாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட விமானம்:
சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்ட போது, அவசரமாக கடைசி நேரத்தில் ஐதராபாத்திற்கு செல்லும் விமானத்திற்கு இரண்டு நபர்கள் டிக்கெட் கேட்டதாகவும் அதில் ஒருநபர் டிக்கெட் வாங்கி சென்றதாகவும் மற்றொரு நபரின் அடையாள அட்டை சரியாக இல்லாத காரணத்தினால் டிக்கெட் வழங்கவில்லை என்றும் கிடைத்த தகவலின் பேரில் ஐதராபாத் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்த போது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விமானகட்டுபாட்டு அறைக்கு உரிய முறையில் தகவல் அறிவித்து விமானம் நிறுத்தப்பட்டது.
உடனே காவல் ஆய்வாளர் (விமான நிலையம்) ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட குற்றவாளியை கைது செய்து விமானத்திற்கு வெளியே இறக்கி கொண்டு வந்தார். பின்னர் மற்றொரு நபர் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை செல்வதற்கு தயாராக இருந்த போது சென்னை விமான நிலையத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார்.
ரயிலில் சிக்கிய மூன்றாவது குற்றவாளி:
கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை செய்ததில் இக்குற்றத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து பினாக்கி எக்ஸ்பிரஸ் இரயில் மூலம் ஐதராபாத்திற்கு செல்வதாக தெரியவந்தது. உடனடியாக மத்திய இரயில்வே பாதுகாப்பு படைக்கு இது குறித்து சரியான தகவல் கொடுக்கப்பட்டு ஆந்திர மாநிலத்திற்குட்பட்ட ஓங்கோல் இரயில் நிலையத்தில் வைத்து மத்திய இரயில்வே பாதுகாப்பு படையினரால் 3-வது நபர் கைது செய்யப்பட்டார். இது சம்பந்தமான புலன் விசாரணையில் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்கள், அபகரிக்கப்பட்ட தங்க நகைகள் சம்பந்தமாகவும், வடமாநில குற்றவாளிகள் ஏற்கனவே செய்து இருக்கும் குற்றங்களை குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் ஜாபர் குளாம் உசேன் இரானி, மிசாம மஜாதுஷமேசம் இரானி ஆகிய இருவரும் சென்னை விமான நிலையத்திலும் சல்மான் உசேன் இரானி என்பவர் ஓங்கோல் இரயில் நிலையத்திலும் கைது செய்யப்பட்டனர். இவர்களை மேலும் விசாரணை செய்ததில் மேற்கண்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
தப்பியோட முயன்ற குற்றவாளி:
இந்த குற்ற சம்பவத்தில் அபகரிக்கப்பட்ட நகைகள் மற்றும் இக்குற்றச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மீட்பதற்காக தரமணி இரயில்வே நிலையத்திற்கு அருகே இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் அழைத்து சென்ற போது குற்றவாளி ஜாபர் குளாம் உசேன் இரானி குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து ஏற்கனவே அவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து காவல் அதிகாரிகளை நோக்கி சுட்டார்.
காவல் அதிகாரிகள் சுடவேண்டாம் என்று பலமுறை எச்சரித்த போதும் மீண்டும் சுட்டார். வேறு வழியின்றி தற்காப்பிற்காக சுட்டதில் மேற்படி நபர் காயம் அடைந்தார். உடனே காயம் அடைந்த நபரை சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர் பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த நபரின் பிரேத உடலானது இராயப்பேட்டை அரசு மருத்துவமணை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றது முதல் இது நான்காவது என்கவுண்டராகவும், இந்த என்கவுண்டர் செய்த காவல் ஆய்வாளர் முகமது புகாரி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் என்பவரையும் என்கவுண்டர் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






