நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: சிக்கித் தவிக்கும் தமிழர்கள்.. மீட்பு தீவிரம்!
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் சிக்கி தவிப்பு...
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கனமழை மற்றும் பனிப்பாறைகள் உருகியதால் போட்டே கோஷி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, பல கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் தமிழர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்:
ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேபாள ராணுவத்தினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
57 தமிழர்கள் வெள்ளத்தில் சிக்கினர்:
இந்நிலையில், நேபாளத்திற்கு புனிதப் பயணம் மற்றும் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் ராசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளனர்.
இவர்களில் சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மூன்று பேருந்துகளில் நேபாளத்தின் மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்த ஒரு பேருந்து வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் அங்கிருந்து தப்பித்து திமுர் பகுதியில் உள்ள பாதுகாப்பான ராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.
22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு:
வெள்ளத்தில் சிக்கியிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்டவர்கள் நேபாள ராணுவ முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் இருந்து தப்பிய தமிழர்கள் தங்களது நிலை குறித்து குரல் பதிவு மூலம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை:
வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பிலும் பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் நேபாள தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்தும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் தமிழர்களை தொடர்புகொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல்:
ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் தமிழர்கள் மட்டுமின்றி 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளம் காரணமாக சுமார் 19 பாலங்கள், 40 கிலோமீட்டர் சாலைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணி:
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க நேபாள ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சில பகுதிகளில் நீர்மட்டம் மிகவும் அதிகமாக இருப்பதாலும், தரையிறங்குவதற்கு போதிய இடவசதி இல்லாததாலும் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
384 பேர் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியம் தகவல்:
நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவலின்படி, சுற்றுலா மற்றும் பயண நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 384 பயணிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 291 பேர் வெளிநாட்டினரும், 93 பேர் நேபாள நாட்டினரும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை கண்டறிந்து மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு:
நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தகவல்களை பெறுவதற்காக தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
கட்டணமில்லா உதவி எண்: 1800 309 3793
தொடர்பு எண்: 80690 09901
மிஸ்டு கால்: 080690 09900
நேபாள சுற்றுலா வாரியம் சார்பில் அவசர உதவி எண் "1234", ஹாட்லைன் "1144", சுற்றுலாப் பயணிகள் காவல் பிரிவு "9851289445" ஆகிய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து நீடிக்கும் மீட்புப் பணி:
நேபாளத்தின் வடக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சிக்கியுள்ள தமிழர்கள் மற்றும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதே தற்போது முக்கிய பணியாக உள்ளது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், மேலும் பலர் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?

