‘மிரட்டல்’ ஆடியோவால் அதிர்ந்த த.வெ.க... சபரி ஐங்கரன் மீது சர்ச்சை!

பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரை ட்ரோன் விவகாரம், கார் தொடர்பான பேச்சு மற்றும் உறவினருக்கு மிரட்டல் விடுத்ததாக வெளியான ஆடியோ அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Aug 27, 2026 - 07:00
‘மிரட்டல்’ ஆடியோவால் அதிர்ந்த த.வெ.க... சபரி ஐங்கரன் மீது சர்ச்சை!
Sabari Aingaran

சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணை மீது ட்ரோன் பறக்கவிட்ட விவகாரத்தில் பெரியகுளம் த.வெ.க. எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் கேரள வனத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார். அதன் சூடு அடங்குவதற்குள், சட்டப்பேரவையில் தனக்கு கார் இல்லை என அவர் சொன்னது பொய் எனும் சர்ச்சையும் துரத்த, அதைவிட பகீர் ரகமாக உறவினர் ஒருவருக்கு அவர் விடுத்த மிரட்டலால் திகிலடித்து கிடக்கிறது தேனி மாவட்ட த.வெ.க!

இந்த சர்ச்சைகள் குறித்து பெரியகுளத்தில் விசாரித்தோம். ‘ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் கண்ணா என்பவர், 'திராவிட மாடலினால் கலப்பு திருமணத்தில் பிறந்த சின்ன பையன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்' என்று ஸ்டேட்டஸ் வைத்திருந்தாராம். இதையறிந்த எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் டென்ஷனாகி வெங்கடேசனுக்கு போன் செய்து ஆவேசமாக கொந்தளித்தது மட்டுமின்றி, 'உன் அப்பாவுக்காக பாக்குறேன் இல்லேன்னா, போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வச்சிருப்பேன். செமிச்சிடுவேன் பாத்துக்கோ' என கடுமையாக மிரட்டியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வெங்கடேசன் எம்.எல்.ஏ.வின் தெருவைச் சேர்ந்தவர் என்பதுடன் தூரத்து உறவினரும்கூட இதற்கிடையே அவர் தன்னிடம் கார் இல்லை என பொய் சொன்னதும் சர்ச்சையாகியிருக்கிறது. சபரி ஐங்கரன் மிடில் கிளாஸ் தான். அப்பாவும், அம்மாவும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை செவிலியர்களாக பணிபுரிகிறார்கள். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் லாட்ஜூகளை லீஸுக்கு எடுத்து நடத்திவருகிறார். ஸ்டேட் பேங்க் காலனியில் சொந்த வீடும் இருக்கிறது. இவர் கார்கள் மீது மோகம் கொண்டவர் என்பதை அவரது இன்ஸ்டா பக்கத்தை பார்த்தாலே தெரியும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தேர்தல் அஃபிடவிட்டில், சொந்தமாக Tata tigor கார் வைத்திருப்பதாகவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ ஆன பிறகும்கூட, வெளிநாட்டு கார் ஒன்று வாங்கினார். அதில், எம்.எல்.ஏ என்று பெரிய எழுத்தில் போட்டு ரீல்ஸ் போட்டு வருகிறார். ஆனால், சட்டப் பேரவையில், தன்னிடம் கார் இல்லை எனவும் ரயிலிலும் ஆட்டோவிலும் வந்து அவமானப்படுவதாக பொய் பேசியிருக்கிறார். மாண்பு நிறைந்த அந்த அவையில் அவர் இப்படி பேசியது சரியில்லை" என்றனர்.

இதுபற்றி இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத் தலைவர் குரு அய்யப்பன், "தேர்தல் அஃபிடவிட்டில் ஒன்றையும் சட்டப்பேரவையில் ஒன்றையும் சபரி ஐங்கரன் தெரிவித்துள்ளார். இதில் எது உண்மை என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும்" என்றார்.

எம்.எல்.ஏ. சபரி ஐங்கரனின் ஆதரவாளர்களோ, *நகைச்சுவைக்காக சொல்கிறேன் என்று சொல்லித்தான் அவர் அப்படி சட்டமன்றத்தில் பேசினார். அதுவும், தான் கல்லூரி படிக்கும்போது, கார் இல்லை, வேலை இல்லை என்றுதான் குறிப்பிட்டார். இதை வைத்து அரசியல் செய்வது தவறு. தனி தொகுதியில், இவர் பெற்ற வெற்றி கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். பெரியகுளம் தொகுதியில் அவரின் செயல்பாடுகள் பற்றி மட்டுமே பேசுங்கள்" என்கின்றனர். பொது வாழ்க்கையில் விமர்சனத்தை ஏற்பது அல்லது புறந்தள்ளும் பக்குவம் வேண்டும். தவிர, மிரட்டல் விடுப்பது சட்டவிரோத செயலாகிவிடும்.


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow