எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் மாஸ்டர் ஸ்ட்ரோக்..? தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசை தொடர்பாக தொடர்ந்து எழுந்து வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று(ஆகஸ்ட் 10) முக்கிய தீர்மானம் ஒன்றை முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aug 10, 2026 - 07:25
எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் மாஸ்டர் ஸ்ட்ரோக்..? தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கி, அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்தில் இடம்பெறாமல் இறுதியாக பாடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் முன்வைத்திருந்தன. மண், மொழி, மானம் காப்பதே தமிழ்நாட்டின் அடையாளமாக இருந்தது, அந்தவகையில் மொழி அடையாளத்தை தவெக அரசு விட்டுக் கொடுத்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. 

இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்தது. குறிப்பாக தவெக ஆட்சி அமைந்த பிறகு இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் அதிக கவனம் பெற்றது.

இந்த சர்ச்சைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரைக் கொண்ட அந்தப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில், பாடல் வரிசையில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இடம்பெற்றது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு முதலில் வந்தே மாதரம், அதனைத் தொடர்ந்து தேசிய கீதம், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து என நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் இந்த விவகாரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தின.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிகழ்ச்சிகளில் முதலிடம் வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கையில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டால், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் சர்ச்சைக்கு புதிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் அளிக்க உள்ள பதிலாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow