ராகுலா? விஜய்யா? அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? - வைகோ சொன்ன பதில்!
முதலமைச்சர் விஜய்யை 2029-ல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பான பேச்சுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் களம் மாறியுள்ள நிலையில், திமுக, அதிமுக என்ற அரசியல் களத்தை மாற்றி, புதிதாக தொடங்கப்பட்ட தவெகவின் ஆட்சி களமாக தற்போது மாறியுள்ளது.
108 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. தவெகவின் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்காலக் கூட்டணி வியூகங்கள் குறித்து தொடர்ச்சியாகப் பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், சமீபகாலமாக 2029 நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காகப் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே, தவெகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், மூத்த அமைச்சர் செங்கோட்டையனும் “முதல்வர் விஜய் பிரதமராகக் கூடும்” என்று கருத்து தெரிவித்துள்ளனர். செங்கோட்டையனைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜேஸ்வரி செய்தியாளர் சந்திப்பின்போது, ஜோசப் விஜய் “இன்றைய முதல்வர், நாளைய பிரதமர்” என்று தெரிவித்தார். இதன்மூலம், தவெக அமைச்சர்கள் மத்தியில் விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் ஆர்வம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தன்னைச் சுற்றி ‘அடுத்த பிரதமர்’ என்ற பேச்சுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், இதுகுறித்து விஜய் எந்தவொரு மறுப்பும் வெளியாகாதது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு இது தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நாசுக்காக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
மேலும் நேற்று (30/08/2026) கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், “நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய அமைச்சர்கள் பதவியில் நீடிக்க மாட்டார்கள். எல்லா இடங்களிலும் நாம் சொல்ல வேண்டிய கருத்து இதுதான். கட்சி இல்லாமல் இந்த ராஜேஷ்குமார் ஒன்றுமே கிடையாது; இந்த இயக்கம்தான் பெரிது. இந்த இயக்கம் என்ன நினைக்கிறதோ, நாளைக்கு அந்தப் பதவியை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று சொன்னால், அடுத்த நிமிடமே சென்று விடுவோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய அளவில் ‘இந்தியா’ கூட்டணிக்குத் தலைமை தாங்குவது காங்கிரஸ் கட்சி. அதனாலே அந்த அணியின் வேட்பாளராக ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட முடியும். இதற்கு வேறு எந்த மாற்று ஏற்பாட்டுக்கும் வாய்ப்பே இல்லை.
அதைப் பற்றி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கற்பனையில்கூட அந்தவாறு எண்ணம் இருக்காது. இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. அமைச்சர்கள் எல்லாம் பேசும்போது நினைத்த மாதிரி பேசக் கூடாது. ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு, அகில இந்திய அளவில் வரப்போகும் தேர்தலில் ராகுல் காந்திதான் ஒரு பிரதான (Prominent) வேட்பாளராக இருக்க முடியும். அதனால், அதைப் பற்றி இவர் பேச வேண்டிய அவசியமே கிடையாது. இனிமேல் இப்படி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இப்படி தன்னை சுற்றி சர்ச்சைகள் எழும் நிலையில் இதற்கெல்லாம் முதலமைச்சர் விஜய் என்ன பதிலளிக்க போகிறார்? கூடிய விரைவில் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்று அரசியல் களத்தில் பல கேள்வி எழுகின்றன.
What's Your Reaction?