விஜய் தங்கும் லண்டன் ஹோட்டல்... ஒருநாள் வாடகையை இத்தனை லட்சமா?
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய் தங்கியுள்ள ‘தி ஷார்ட்’ கட்டிடத்தில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டலின் ஆடம்பர வசதிகள் மற்றும் வாடகை கவனம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளைத் தேடி லண்டன் சென்றிருக்கிறார் முதலமைச்சர் விஜய். அரசு முறைப் பயணமாக ஆறு நாட்கள் அங்கு முகாமிடும் அவர், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இந்தச் சூழலில், லண்டனில் அவர் தங்கியிருப்பதாகக் கூறப்படும் இடம் கவனம் பெற்றுள்ளது.
‘தி ஷார்ட்(The Shard)’ கட்டிடம் மொத்தம் 52 தளங்களைக் கொண்டது. ஐரோப்பாவின் உயரமான கட்டிடங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தக் கட்டிடம், லண்டன் நகரின் ஸ்கைலைனில் தனித்த அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த ஹோட்டலின் அறைகளில் தங்குபவர்களுக்கு கிடைக்கும் முக்கிய அனுபவம், நகரத்தின் பிரம்மாண்டமான காட்சிதான். உயரமான தளங்களில் இருந்து தேம்ஸ் நதி உள்ளிட்ட லண்டனின் முக்கிய பகுதிகளைப் பார்க்க முடியும். பகல் நேரத்தில் நகரத்தின் பரபரப்பையும், இரவில் ஒளிரும் லண்டனையும் மேலிருந்து ரசிக்கக்கூடிய வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது வெறும் தங்கும் அறை மட்டுமல்ல... முழு ‘லக்சரி’ அனுபவமே இங்கே கிடைக்கும் என்கிறார்கள். விதவிதமான உணவு வகைகளை வழங்கும் உணவகங்கள், பிரத்யேக நிகழ்ச்சிகளுக்கான இடங்கள், நிறுவனக் கூட்டங்களுக்கான வசதிகள் என ஹோட்டலுக்குள் பல்வேறு ஏற்பாடுகள் உள்ளன. உயரமான தளத்தில் அமைந்துள்ள நீச்சல் குளமும் இந்த ஹோட்டலின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
இப்போது முக்கியமான கேள்வி. இப்படிப்பட்ட இடத்தில் ஒரு இரவு தங்கினால் எவ்வளவு செலவாகும்? என்பதுதான். அறையின் வகை மற்றும் முன்பதிவு காலத்தைப் பொறுத்து கட்டணம் மாறுபடும் நிலையில், ஹோட்டல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.96 ஆயிரம் முதல் ரூ.2.70 லட்சம் வரை செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது. வரி உள்ளிட்ட கூடுதல் கட்டணங்கள் இதற்கு மேல் இருக்கலாம்.
இதற்கிடையே, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க லண்டனில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தங்கியிருப்பதாகக் கூறப்படும் ஹோட்டலுக்கு வெளியே தமிழர்கள் காத்திருக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்குத் தொடங்கும் பந்தயம், இரவு 11.45 மணியளவில் முடிவடைய உள்ளது.
முதலமைச்சரின் லண்டன் பயணத்தின் பிரதான நோக்கம் முதலீடுகளை ஈர்ப்பதுதான் என்றாலும், அவர் தேர்வு செய்திருக்கும் தங்குமிடம் முதல் தமிழர்களுடனான சந்திப்பு, சில்வர்ஸ்டோன் கார் பந்தயம் வரை... விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் பல்வேறு காரணங்களால் பேசுபொருளாகியுள்ளது.
What's Your Reaction?