“உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா” அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகமன் படம் பார்த்த இளைஞர் கைது
மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் யுவராஜ், தேர்தல் அன்று அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூம் அருகே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு அறையில் அமர்ந்து கொண்டு ஜனநாயகன் திரைப்படம் பார்த்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 3 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாக்கு என்னும் மையத்தின் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு ஊழியர் லேப்டாப் மூலமாக சட்டவிரோதமாக ஜனநாயகன் திரைப்படம் பார்த்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தகவல் தொழில்நுட்ப அதிகாரி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது,கடந்த 23ஆம் தேதி வாக்குப் பெட்டிகள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்படும் முன்பாக, சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த யுவராஜ் (36) என்பவர் சட்ட விரோதமாக ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் சிசிடிவி டெக்னிக்கல் ஹெட்டாக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில், கோட்டூர்புரம் போலீசார் யுவராஜை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்கான குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?