சிக்கன் ரைஸில் வேதிப்பொருள்? பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்...நாமக்கலில் பரபரப்பு

May 1, 2024 - 21:25
சிக்கன் ரைஸில் வேதிப்பொருள்? பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்...நாமக்கலில் பரபரப்பு

நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் சம்மந்தப்பட்ட உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

நாமக்கல் மாவட்டம் தேவராயபுரத்தை சேர்ந்தவர் பகவதி. இவர் புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில்  நேற்று (ஏப்ரல்-30) நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள கருணாநிதி என்ற உணவகத்தில் 7 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கியதாக சொல்லப்படுகிறது. 

இதையடுத்து சிக்கன் ரைஸை பகவதியின் குடும்பத்தினர் சாப்பிட்ட நிலையில், அவரது தாய் நித்யா மற்றும் தாத்தா சண்முகம் ஆகியோருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதறியடித்த பகவதி, இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், பகவதி அளித்த புகாரின் பேரில் கருணாநிதி உணவகத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். சிக்கன் ரைஸ் எப்போது வாங்கப்பட்டது? என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த பின் உணவகத்திற்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட இருவரையும் சோதனை செய்ததில் சிக்கன் ரைஸில்  நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சிக்கன் ரைஸின் மாதிரி பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் உணவகத்தின் உரிமையாளர் ஜீவானந்தத்திடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow