கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கொலை- மனைவி உள்பட 3 பேர் கைது
வெளிநாட்டில் பணிபுரியும் முதல் குற்றவாளியான தங்க பாண்டியனை கைது செய்வதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவரை கள்ளக்காதலனின் நண்பர்களை வைத்து கொலை செய்த மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே மேலவன்னியூர் பகுதியை சேர்ந்தவர் மாமல்லன்(45).இவரது மனைவி நாகலெட்சுமி(37) இவர்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன.மாமல்லன் நெடும்பூர் ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மேலவன்னியூர் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன்(27)என்பவருக்கும் நாகலெட்சுமியும் கடந்த மூன்று வருடங்களாக பழகி வந்துள்ளனர்.இதனை மாமல்லன் கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாமல்லன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிதம்பரம் பகுதியில் குடியேறினார்.அதன்பின் தினந்தோறும் சிதம்பரத்தில் இருந்து பேருந்து மூலம் குமராட்சிக்கு வந்து குமராட்சியில் உள்ள தனது இரண்டு சக்கர வாகனத்தின் மூலம் மேல வன்னியூர் பகுதிக்கு சென்று குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணிகளை மேற்கொண்டு வந்தார்.இதற்கிடையே தங்கபாண்டியன் வெளிநாடு வேலைக்கு சென்றுள்ளார்.அங்கிருந்து நாகலட்சுமிக்கு வீடியோ கால் மூலம் தினந்தோறும் பேசிவந்துள்ளார்.இதனை அறிந்த மாமல்லன் மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி குமராட்சி அருகே சாலை ஓரத்தில் மாமல்லன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் சென்ற குமராட்சி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து மாமல்லனின் அண்ணன் இளமதி அளித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு சரக துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் தலைமையில் குமராட்சி காவல் ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நாகலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து நாகலட்சுமியிடம் விசாரித்தனர். விசாரணையில் கள்ளக்காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கனவனை கொலை செய்து விபத்து போல நாடகம் ஆடியது தெரியவந்தது.இதன் அடிப்படையில் டிஎஸ்பி ரூபன் குமார் தலைமையில் போலீசார் தங்கபாண்டியன் நண்பர்களான கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த ஆந்திர சட்டக்கல்லூரி மாணவர் ராஜகுரு(28),மெக்கானிக் இளவேந்தன்(24)ஆகியோரை கைது செய்து விசாரித்ததில் நாகலட்சுமி தூண்டுதலின்பேரில் அவரது கணவரை கொலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதிகாலை 5 மணியளவில் நெடும்பூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மாமல்லனை வழிமறித்து இரும்பு ராடால் தலையில் பலமுறை அடித்து அவரை சாய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக ஒப்புக்கொண்டனர்.இதனை அடுத்து மாமல்லனை கொலை செய்ய தூண்டுதலாக இருந்த முக்கிய குற்றவாளி நாகலட்சுமி கைது செய்து வேலூர் மத்திய சிறையிலும், சட்டக்கல்லூரி மாணவர் உட்பட 2 வாலிபர்களை கடலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர். மேலும் வெளிநாட்டில் பணிபுரியும் முதல் குற்றவாளியான தங்க பாண்டியனை கைது செய்வதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)