70வது தேசிய திரைப்பட விருது... மம்மூட்டி - ரிஷப் ஷெட்டி நடுவே வலுக்கும் போட்டி!
இன்று (ஆகஸ்ட் 16) பிற்பகல் 3 மணியளவில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படவுள்ளது.
                                    திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு 1954ம் ஆண்டிலிருந்து தேசிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதுகூடவே சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருதும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு வழங்கப்படவுள்ள 70வது தேசிய விருதுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது, சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவ்விருது வாங்கும் இயக்குநருக்கு பதக்கமும், ரூ. 3 லட்சம் பரிசும் வழங்கப்படவுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான நர்கிஸ் தத் விருது, தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது பெறும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் பதக்கமும், தலா ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தாதாசாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறந்த படம், முதல் படம், முழுமையான பொழுதுபோக்கு வழங்கும் படம், இயக்கம் மற்றும் குழந்தைகள் படம் வகையில் வழங்கப்படும் சுவர்ண கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.3 லட்சமாகவும், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம், நடிப்பு பிரிவுகள், சிறந்த திரைக்கதை, இசை மற்றும் பிற பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் ரஜத் கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) பிற்பகல் 3 மணியளவில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி சிறந்த நடிகர்களுக்கான விருதுக்கு மம்மூட்டி மற்றும் ரிஷப் ஷெட்டி நடுவே கடுமையான போட்டி நிலவி வருகிறது. லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் பிரமாண்டமான நடிப்பை வெளிப்படுத்தி கலக்கியிருப்பார் மம்மூட்டி. ‘காந்தாரா’ திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத அளவிற்கு நடிப்பில் அசத்தியிருப்பார் ரிஷப் ஷெட்டி.
தற்போது இவர்களுக்கு போட்டியாக ‘12த் ஃபெயில்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்த விக்ராந்த் மேஸி களமிறங்கியிருக்கிறார். இறுதியில் விருதினை தட்டிச்சென்று போகப்போவத் யார் என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            