"நீங்கள் எப்போதும் எனக்கு உத்வேகம்" - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிராஜ் நெகிழ்ச்சி பதிவு..!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி வெளியேறியதையடுத்து, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆர்லிங்டனில் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் தோல்வியடைந்தது. போட்டியின் இரண்டாவது பாதி கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ அடித்த கோல் ஆட்டத்தின் வெற்றிக் கோலாக அமைந்தது. இதன்மூலம் ஸ்பெயின் அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
போட்டி முடிந்ததும் ரசிகர்களை நோக்கி கைதட்டியபடி, கண்கலங்கிய நிலையில் ரொனால்டோ மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 41 வயதான ரொனால்டோ உலகக் கோப்பை வரலாற்றில் 27 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், ஆறு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் தக்க வைத்துள்ளார். சர்வதேச கால்பந்தில் 233 போட்டிகளில் விளையாடி 146 கோல்கள் அடித்துள்ள அவர், போர்ச்சுகலுக்காக 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டு யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளார்.
போட்டிக்குப் பிறகு பேசிய ரொனால்டோ, “இப்படி உலகக் கோப்பையை விட்டு வெளியேறுவது வேதனையாக இருக்கிறது. ஆனால் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். எனது மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. இது எனது கடைசி உலகக் கோப்பை என்பது உண்மை. தேசிய அணியில் தொடர்ந்து விளையாடுவது குறித்து தற்போது எதையும் கூற விரும்பவில்லை,” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் ரொனால்டோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், “நீங்கள் எப்போதும் எனக்கு உத்வேகமாக இருப்பீர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஒரே ஒரு போட்டியால் உங்கள் மகத்துவத்தை ஒருபோதும் வரையறுக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.
சிராஜின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரொனால்டோ ரசிகர்கள் பலரும் அதனை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். உலகக் கோப்பை பட்டம் எட்டாத கனவாக இருந்தபோதிலும், தனது சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்பால் கால்பந்து உலகில் அழியாத இடத்தை ரொனால்டோ பெற்றுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?