அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி- காளைகளை அடக்கி வீரர்கள் அசத்தல்

அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் சாலை, விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன

Jan 15, 2024 - 22:03
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி- காளைகளை அடக்கி வீரர்கள் அசத்தல்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி- காளைகளை அடக்கி வீரர்கள் அசத்தல்

உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். சீறி வரும் காளைகளை அடக்கி ஆளும் காளையர்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு போட்டியில் பங்கேற்றனர். போட்டியின் முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.   

இதில் ஆயிரம் காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர் தலா ஒரு கார் என 2 கார்கள் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டி பாதுகாப்பாக நடக்க 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

போட்டியில் கலந்துகொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான QR கோடுடன் கூடிய அனுமதிசீட்டுடன் தங்கள் காளைகளை பங்கேற்க வைத்து வருகின்றனர்.  காளைகள் களமிறங்கும் வாடிவாசல் பகுதியில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பபட்டுள்ளன.  

முத்துப்பட்டி சாலை சந்திப்பு தொடங்கி அவனியாபுரம் பேருந்துநிலையம் வரை வாடிவாசல், காளை சேகரிப்பு இடம், காளை மருத்துவபரிசோதனை பகுதி, காளைகள் அனுப்பும் பகுதி, பார்வையாளர்கள் பகுதி உள்ளிட்டவைகளுடன் இருபுறமும் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 போட்டியை பார்வையிடுவதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.போட்டி பாதுகாப்பாக நடக்க மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில்  2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அவசரகால மருத்துவ தேவைக்காக மருத்துவகுழுக்களும், கால்நடை மருத்துக்குழுக்களும், 108அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.  

போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்படுகின்றன. 

ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர், ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர்

போட்டியானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியரால் முடிவு எடுப்பார். இந்த ஆண்டு ஆள்மாறாட்ட முறைகேட்டை தடுக்கும் வகையில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் QR கோடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின்  உரிமையாளர்கள் போட்டியின் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மது அருந்திவிட்டு வந்தால் உடனடியாக போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் போட்டியின் போது ஏதேனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய காளையின்  உரிமையாளர்கள் மூக்கணாங்கயிற்றை அவிழ்ப்பதற்காக கையில் கத்தியோ,  அரிவாளோ எடுத்து வரக்கூடாது எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் போட்டி நடைபெறக்கூடிய வில்லாபுரம் அவனியாபுரம் முத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடை மற்றும் மன மகிழ் மன்றங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று பாதுகாப்பு நலன் கருதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறக்கூடிய பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் சாலை, விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன

போட்டியின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய காவல்துறையினர் உரிய பாதுகாப்பு கவசங்களை பொருத்தி பணியாற்ற வேண்டுமென மாநகர காவல் துறையை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைக்கு காலில் காயம் ஏற்பட்டதால் களத்தில் படுத்துக்கொண்டது.இதனால் காயம் ஏற்பட்ட காளைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.காயம் ஏற்பட்ட காளைக்கு சிகிச்சையளித்து அங்கிருந்து வெளியேற்றுவதற்காக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதேபோல் 20 வீரர்கள் மற்றும் போலி டோக்கன் வைத்து காளைகளை கொண்டு வந்ததாக 21 காளைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.அதேபோல் 16 காளைகளை பிடித்து அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி முதலிடத்திலும், 13 காளைகளை அடக்கி ரஞ்சித் 2 வது இடத்திலும் உள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow