நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முக்கிய தலைவர்கள் திடீர் சந்திப்பு பின்னணி…!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்முகம் ஆகியோர் திடீர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுகவும் பாஜகவும் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்தான முடிவுகளை எடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்துவந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவரப்படுகிறார்களா எனும் கேள்விகள் எல்லாம் எழுந்த சூழலில் அதிமுக மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிதி அமைச்சர் அலுவலகத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.பி.க்கள் சி.வி. சண்முகம், தனபால் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின் போது சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சொன்ன தகவல்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பரிமாறியதாக தெரிகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாகவும் ஆலோசித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

