பூண்டி நீர்தேக்கத்தில் பழுதான ஷட்டர்கள்.. வீணாகும் தண்ணீர்.. குற்றம் சாட்டும் பொதுமக்கள்

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி நீர்த்தேக்கத்தின் ஷட்டர்கள் பழுதாகி தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Apr 1, 2024 - 13:51
பூண்டி நீர்தேக்கத்தில் பழுதான ஷட்டர்கள்.. வீணாகும் தண்ணீர்.. குற்றம் சாட்டும் பொதுமக்கள்

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி நீர்த்தேக்கத்தின் ஷட்டர்கள் பழுதாகி தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி நீர்த்தேக்கம் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நீர்த்தேக்கமானது கடந்த 1944 ஆண்டு கட்டப்பட்டு, தற்போது வரை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பினால் அதில் இருந்து உபரி நீர்வெளியேறும் வகையில் 800 அடி நீளத்தில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் உள்ளன. இந்த ஷட்டர்களில் சில சேதமடைந்து. நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது.

 

பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 29 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது மழை இல்லாதததால் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உபரி நீர் செல்லும் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது.

 

ஷட்டர்களில் ஏற்பட்ட பழுது காரணமாக நாள்தோறும் வினாடிக்கு 30 கன அடி தண்ணீர், கொசஸ்தலை ஆற்றின் வழியாக சென்னை மக்களின் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்நிலையில், பொதுப் பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow