நடிகர் கவுண்டமணியின் நீண்ட கால போராட்டம்... முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம்...

Mar 15, 2024 - 08:39
நடிகர் கவுண்டமணியின் நீண்ட கால போராட்டம்... முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம்...

1996 ஆம் ஆண்டு வணிக வளாகம் கட்டுவதற்காக, நடிகர் கவுண்டமணி கொடுத்த 5 கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும்படி தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

தமிழ் திரையுலகில் முக்கிய நகைச்சுவை நடிகரான கவுண்டமணி, கடந்த 1996 ஆம் ஆண்டு நளினி பாய் என்பவருக்கு சொந்தமான கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள நிலத்தை  வாங்கி, அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொண்டார். கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாக ரூ.3.58 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ரூ.1.4 கோடி செலுத்திய நிலையில், 2003 ஆம் ஆண்டு வரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை எனக்கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார்.  இதையடுத்து சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர், ரூ.46.51 லட்சத்துக்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, கட்டுமானப் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு பணம் தராவிட்டால்தான் அதைக் கேட்க முடியும் எனவும் முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது ரூ.63 லட்சம் அதிகமாகவே  நடிகர் கவுண்டமணியிடம் கட்டுமானம் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் நீதிபதி கூறினார். தொடர்ந்து அவரிடமிருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் கவுண்டமணியிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக அவருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

2019 ஆம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் 2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்தும், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும்  தீர்ப்பளித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow