தஞ்சாவூரில் பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்

வெளிநாட்டினரும் பங்கேற்று நடனமாடி உற்சாகமடைந்தனர்.

Jan 15, 2024 - 17:30
Jan 15, 2024 - 22:09
தஞ்சாவூரில் பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்

தஞ்சாவூரில் வெளிநாட்டினர் கொண்டாடிய கிராமத்து பொங்கல் விழா, கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக நடைபெற்றது. 
     
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தை மாதம் முதல்நாள் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (ஜன 15)பொங்கல் பண்டிகை பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதைப்போல் தஞ்சாவூரில் வெளிநாட்டினர் கொண்டாடிய கிராமத்து பொங்கல் விழா தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.பிரான்ஸ், நெதர்லாந்து, போலந்து, இங்கிலாந்து,அமெரிக்கா ஆகிய வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூருக்கு வருகை தந்த 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

 முன்னதாக  தாரை தப்பட்டை, புலியாட்டம் கொம்பு முழங்க மாட்டு வண்டியில் வெளிநாட்டினர் பாரம்பரிய வேட்டி சேலையில் அழைத்து வரப்பட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நடைபெற்ற கும்மியாட்டம், புலியாட்டம்,கோலாட்டம், பானைஉடைத்தல்,கயிறுஇழுத்தல், இளவட்ட கல் தூக்குதல் ஆகிய நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

 மேலும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம்,தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மள்ளர் கலம், நவ தெய்வங்கள் சாமி ஆட்டம் ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் கலந்து கொண்டார். மேலும் அப்பகுதி கிராம பொதுமக்கள் வெளிநாட்டினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதில் வெளிநாட்டினரும் பங்கேற்று நடனமாடி உற்சாகமடைந்தனர். அங்கு அவர்களுக்கு சக்கரை பொங்கல், சுண்டல், வாழைப்பழம், கரும்பு மற்றும் இளநீர் வழங்கப்பட்டது. அதனையும் ருசித்து கொண்டே நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தங்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது என்றும் மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow