வைரத்தை எட்டிப்பிடிக்கும் தங்கம்... எதில் முதலீடு செய்வது லாபம்... நிபுணர்கள் சொல்வதென்ன..?

தங்கத்தின் விலை ஒரு கிராம் 7,000 ரூபாயை நெருங்கியுள்ளது. விரைவில் ஒரு கிராம் ரூ.10,000ஐ எட்டிப்பிடிக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2025ஆம் ஆண்டில், தங்கம் ஒரு சவரன் 80,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Apr 16, 2024 - 13:02
வைரத்தை எட்டிப்பிடிக்கும் தங்கம்... எதில் முதலீடு செய்வது லாபம்... நிபுணர்கள் சொல்வதென்ன..?

 தங்கம் வாங்கும் அதே நேரத்தில், வைர நகைகளை வாங்கவும் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா? வைரத்தில் முதலீடு செய்வது சிறந்ததா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம்.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(16.04.24) ஒரு சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ரூ.54,960 ஆக விற்பனையாகிறது. தங்கத்தின் விலை அரை லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது. வைரம் போல் ஏழைகளுக்கு தங்கம் எட்டாக்கனியாகுமோ என்ற அச்சம் எழுந்தாலும், நகைகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்கத்தை வாங்கத்தான் செய்கிறார்கள். 

தங்கத்துக்கும், இந்தியர்களுக்கும் இடையேயான உறவு பல நூற்றாண்டுகள் பழைமையானது. காலம் காலமாக இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வந்துள்ளனர். தீபாவளி, அட்சய திருதியை போன்ற பண்டிகை நாட்களில் கொஞ்சமாவது தங்கத்தை வாங்கி வைக்கின்றனர். தங்கம் வாங்கும் அதே நேரத்தில் வைர நகைகளை வாங்கவும் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா? வைரத்தில் முதலீடு செய்வது சிறந்ததா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம்.

பழங்காலத்திலிருந்தே, தங்கம் அல்லது தங்க நகைகள் பெண்களுடனும், இந்திய குடும்பங்களுடனும் பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டுள்ளன. ஏறக்குறைய ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் தங்க நகைகளை வைத்திருப்பது செல்வம் மற்றும் கௌரவத்தின் சின்னமாகக் கருதப்படும். தங்கம், இந்தியாவில் அதன் முதலீட்டு மதிப்புக்காகவும் மதிக்கப்படுகிறது.

தங்கத்தை ஒரு சேமிப்பாக மட்டுமல்லாமல், அந்தஸ்துக்கான பொருளாகவும் இந்திய மக்கள் பார்க்கின்றனர். தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும்கூட, நகைக் கடைகளில் தங்க நகைகளின் வியாபாரம் அனல் பறக்க நடந்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாத இறுதியில் ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இந்த நிலையில் 15 நாட்களில் ஒரு சவரன் தங்கம் 5 ஆயிரம் உயர்ந்துள்ளது. 

இன்றைய தினம், சென்னையில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 80 விலை உயர்ந்து ரூ 6,870 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ.54,960 ஆக விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 90 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது.

நகைகளை பொறுத்தவரை, தங்கத்தைவிட வைரங்கள் அந்தஸ்தில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதுமே ஆடம்பரப் பிரியர்களிடையே வைரத்திற்கு அதிக கிராக்கி உண்டு. ஆனால், தங்கத்தைவிட வைரம் விலை உயர்ந்தது என்பதால், அதை பலரும் வாங்காமலே தவிர்த்து வந்தனர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. வைரம் விரும்பிகளுக்கு மிகக் குறைந்த விலையில் வாங்குவதற்கு வாய்ப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு வைரத்தின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது. 

தங்கத்தை போலவே வைர நகைகள் வாங்கும் ஆர்வமும் அதிகம் இருந்து வந்துள்ளது. அதிக விலை காரணமாக தங்கம் வாங்கும் அளவுக்கு வைரம் வாங்கப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் வைர நகைகளை வாங்குவதில் தோஷம் இருக்கிறதா, இந்த ராசிக்காரர்கள் அணியக்கூடாது என்றெல்லாம் ஒரு சிலவற்றைப் பார்க்கிறார்கள்.

அதையெல்லாம் கடந்து, தங்கமும், தொடக்க விலை வைரமும் கிட்டத்தட்ட ஒரே விலையை நெருங்கிவிட்டதால், வைர நகைகள் விற்பனை அதிகமாகி வருகின்றன. 916, 22 கேரட், பி ஐ எஸ் ஹால்மார்க் என்று தங்க நகை வாங்கும்போது அதற்கு பல மதிப்பீடுகள் உள்ளன. நீங்கள் வைர நகைகள் வாங்குவதாக இருந்தால் தூய்மையான வைரம் எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

இன்று தங்கத்தின் விலை என்ன, 22 கேரட் தங்கத்தின் விலை என்ன, 24 கேரட் தங்கத்தின் விலை என்ன என்று தேடினால் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை நிர்ணயித்து விட முடியும். தங்க நகை வாங்கும் பொழுது அதன் நம்பகத்தன்மை மற்றும் தூய்மையின் அடையாளமாக HUID ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை கவனிப்பது அவசியம். இந்த ஹால்மார்க் இருப்பது அது தரமான தங்கம் என்பதற்கான ஓர் அறிகுறி. அடுத்தபடியாக, நகைக்கடை ஸ்டோர் அல்லது வெப்சைட்டில் BIS முத்திரை இருக்கிறதா என்பதை கவனியுங்கள். இந்த லோகோ இருப்பது நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட தூய்மை தரநிலையை பின்பற்றுகிறது என்பதற்கான ஆதாரம்.

வைர நகையாக வாங்கும் பொழுது, அந்த நகையின் விலையில், வைரத்தின் விலையும், அது பாதிக்கப்பட்டிருக்கும் உலோகத்தின் விலையும் அடங்கும். பெரும்பாலும் வைரம், தங்க நகையில்தான் பதிக்கப்பட்டிருக்கும். எனவே வைரத்துக்கான விலையும், அது பதிக்கப்பட்டிருக்கும் தங்கம் எவ்வளவு தூய்மையானது என்று அதனுடைய விலையும் சேர்த்து வைர நகையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் வைரத்தின் தரத்தை 4C என்று கூறுவார்கள். வைரத்தின் கிளாரிட்டி, நிறம், வெட்டுதல், காரட் ( Clarity, Color, cut and Carat )

நிலக்கரி தான் வைரமாக மாறுகிறது என்று அனைவருக்குமே தெரியும். நிலக்கரி வைரமாக மாறுவதற்கு எந்த அளவுக்கு அழுத்தத்தை தாங்குகிறது என்பதன் அடிப்படையில்தான் வைரத்தின் தன்மை இருக்கும். வைரம் தெளிவாக இருக்கிறதா அல்லது மங்கலாக இருக்கிறதா என்பதை தான் வைரத்தின் கிளாரிட்டி என்று கூறுவார்கள்.

வைரத்தின் நிறம்  நிறமில்லாத வைரம் முதல் வெளிர் மஞ்சள் வரை பல நிறங்களில் வைரம் இருக்கும். நிறமில்லாத வைரங்கள் நல்ல தரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

வைரத்தின் வடிவம் நகையாக பயன்படுத்துவதற்கு முன்பு அல்லது நகையில் குறிப்பிட்ட வடிவில் பயன்படுத்துவதற்கு முன்பு, வைரத்தை தேவைக்கேற்றவாறு வெட்டி பாலிஷ் செய்வார்கள். அது எவ்வளவு துல்லியமாக வெட்டப்படுகிறதோ அந்த அளவுக்கு மிக மிக அழகாக இருக்கும்.

காரட் வைரத்தின் எடையைக் குறிக்கிறது. 0.2 கிராம் முதல் 200 மில்லிகிராம் வரை என்று வைரத்தின் எடை அளவிடப்படுகிறது.

வைர நகை செய்ய பயன்படுத்தும் தங்கத்தில் 22 கேரட் தங்கம் சேர்க்கப்படாது. பெரும்பாலும், 18 கேரட் அல்லது 14 கேரட் தங்கம் தான் சேர்க்கப்படும். இன்றைய தேதியில் வைரம் 0.2 கிராம் ரூ.65,000 ஆக விற்பனையாகிறது. 100 மில்லி கிராம் ரூ.6,500 ஆக விற்பனையாகிறது. கால் காரட் வைரம் ரூ.16,250 ஆகவும் அரை காரட் வைரம் ரூ.32,500 ஆகவும் 1 காரட் வைரம் ரூ. 65000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதகாலமாக வைரத்தின் விலை ஒரே நிலையில் நீடிக்கிறது.

வைரம் மற்றும் தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை, இடைப்பட்ட ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், காலப்போக்கில் தங்கம் வலுவடைவது உறுதி. செல்வத்தை உருவாக்கும் போது கூட ஆபத்தை குறைக்கும் ஒரு சாத்தியமான சொத்து வகுப்பை தங்கம் உருவாக்குகிறது. மறுபுறம், வைரங்கள் விலை ஒரே நிலையில் நீடிக்கிறது. தங்கத்தைப் போல வைரங்கள் நீண்ட கால ஆதாயங்களை கொடுக்க முடியாது.

தங்கத்தை விட வைரம் விலை உயர்ந்ததாக இருந்தாலும், உடனடியாக பயன் தருவது தங்கத்தில் செய்யும் முதலீடு மட்டுமே. தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களில் முதலீடு செய்வது நல்ல விஷயம் என்றாலும், அதில் நாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது அவசியம். தற்போது கோல்டு ETFகள், தங்க பத்திரங்கள் மற்றும் கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற டிஜிட்டல் கோல்டு ஆப்ஷன்களில் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இது போன்ற டிஜிட்டல் கோல்டு ஆப்ஷன்களை நாம் தேர்வு செய்யும் பொழுது அவற்றை எளிமையான முறையில் சேமிக்கவும்,

நகையாக வாங்குவது பாரம்பரியமான ஒரு விஷயமாக இருந்தாலும் டிஜிட்டல் கோல்டு என்பது கல்வி, திருமணம் போன்ற விஷயங்களுக்கு நீண்ட கால முதலீடுக்கு ஒரு அடித்தளமாக அமைகிறது. டிஜிட்டல் கோல்டில் ஒருமுறை மட்டுமே மூன்று சதவீதம்  GST வசூலிக்கப்படுகிறது. ஆனால் கோல்டு ETF-கள் மற்றும் கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தங்க பத்திரங்கள் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை வழங்கும்போது, கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்த மதிப்பை பொறுத்து டிரேடிங் செய்வதன் அடிப்படையில் லாபம் பெறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow