Suriya’s Next: சூர்யாவை வைத்து பான் இந்தியா பட தயாரிக்கும் Hombale..!
கருப்பு பட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யாவின் அடுத்த திரைப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றபோதும், பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாக சொதப்பலையே சந்தித்தது. இந்த நிலையில், தான் அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கைப் போடு போட்டது. சூர்யாவின் கெரியரில் இப்படம் மிகப்பெரிய ஹிட் என்றே சொல்ல வேண்டும்.
கருப்பு பட ஹிட்டுக்கு பிறகு, சூர்யா அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், தற்போது அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேஜிஎப், காந்தாரா, சலார் உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றிப்படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் மிக பிரம்மாண்டமாக சூர்யா பட்த்தின் மூலம் காலடி எடுத்து வைக்க உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிறுவனத்தின் இரண்டாவது தமிழ்ப்படம், தமிழை மையமாக வைத்து முதல் பான் இந்தியா படமாக இப்படம் அமைய உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குவார் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் தற்போது, ஜெய் பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
படத்தில் கதாநாயகியாக நடிகை கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளராக இளம் இசைஞர் சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். கருப்பு படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் சாய் அபயங்கர் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் தமிழில் பல படங்களை தயாரித்து வரும் நிலையில், தற்போது கன்னட தயாரிப்பு நிறுவனங்களும் தமிழ்த் திரையுலகில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.
நடிகர் சூர்யாவும் ஏற்கனவே தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய நிலையில், தற்போது கன்னட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இதனால் தென்னிந்திய திரைப்படத் துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்று வருவதாகக் கருதப்படுகிறது.
அதேவேளையில், முன்னணி தமிழ் நடிகர்கள் வெளிமாநில தயாரிப்பு நிறுவனங்களுடன் அதிக அளவில் இணைந்து பணியாற்றுவது குறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், பான்-இந்திய திரைப்படங்களின் வளர்ச்சி இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?