அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு-ஆவணங்கள் இருப்பதாக நீதிபதி தகவல்

வழக்குகளின் ஆவணங்கள் தலைமை நீதிபதியிடம் உள்ளது என நீதிபதி தகவல்

Feb 8, 2024 - 13:11
அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு-ஆவணங்கள் இருப்பதாக நீதிபதி தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகளின் ஆவணங்கள் தலைமை நீதிபதியிடம் இருப்பதாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தற்போதைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டது மற்றும் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.அதேபோல முன்னாள் அமைச்சர்களான, பொன்முடி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். 

இதனிடையே இதற்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உத்தரவிட்டது. 

இந்நிலையில், அமைச்சர்கள்  கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (பிப்.08) மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.இதனிடையே, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறித்து முறையீடு செய்தார். 

அப்போது, வழக்குகளின் ஆவணங்கள் தலைமை நீதிபதியிடம் உள்ளதாகவும், தலைமை நீதிபதியின் முடிவின் அடிப்படையில் விசாரணை குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow