குணமடைந்த சத்குரு.. டெல்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. ஈஷா அறக்கட்டளை நன்றி

"சத்குருவிற்கு அன்பையும் ஆதரவையும் அளவற்ற வகையில் வெளிப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி"

Mar 27, 2024 - 18:05
குணமடைந்த சத்குரு.. டெல்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. ஈஷா அறக்கட்டளை நன்றி

டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்குரு அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒட்டு மொத்த மருத்துவ குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 

ஈஷா யோக மையத்தில் கடந்த மார்ச் 8ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற அந்த விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் உரையாற்றினார். பல கோடி மக்கள் நேரலையிலும் தரிசனம் செய்தனர். விழா முடிந்த பிறகு சத்குருவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடும் தலைவலியால் பாதிக்கப்பட்ட சத்குருவிற்கு கடந்த மார்ச் 17ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு விரைவாக குணமடைந்து வந்தார்.  மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது. 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வந்த சத்குரு இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி அவர்கள் சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் பேசிய அவர், சத்குரு அவர்கள் உடல் நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் குணமடையும் அதே வேளையில் அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்து கொண்டுள்ளார். 

உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, அவருடைய புத்தி கூர்மை மற்றும் அவரின் நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே சிறப்பாக உள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறினார்.

சத்குரு நலமுடன் டிஸ்சார்ஜ் ஆனதற்கு ஈஷா அறக்கட்டளை நன்றி கூறியுள்ளது. சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் த்யாகி, டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, இந்த சவாலான சூழலில் உலகெங்கும் இருந்தும் சத்குருவிற்கு அன்பையும் ஆதரவையும் அளவற்ற வகையில் வெளிப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஈஷா அறக்கட்டளை மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow