கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: கறார் காட்டும் திமுக
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கூடுதல் தொகுதி கேட்கும் கட்சிகளுடன் கறார் கட்ட திமுக தொடங்கியுள்ளதால் கூட்டணி கட்சிகள் அச்சம் அடைந்துள்ளன.
கடந்த 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது. முதல் நாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. இதை தொடர்ந்து மதிமுக, மமக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இன்றைய தினம் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, இ.கம்யூ, மா.கம்யூ ஆகிய கட்சிகளுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்,"திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கிறது என முன்னறே கூறியிருந்தோம். அதனடிப்படையில் இன்று திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன், எங்கள் கட்சி சார்பில் நானும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல் ராஜ், கண்ணன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.
கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என ஏற்கனவே மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. அந்த கோரிக்கையையும் பேச்சுவார்த்தைக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் கலந்துபேசி தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.தொகுதிப் பட்டியல் தொடர்பாக எதுவும் வழங்கவில்லை. முதலில் தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானித்துவிட்டுதான் அடுத்து எந்த தொகுதியில் போட்டி என்பது பற்றி கூறுவோம். தொகுதியை குறைக்கவேண்டும் என்பதுபோன்ற கோரிக்கையை எதுவும் திமுக வைக்கவில்லை. பாஜக-அதிமுக கூட்டணியை முறியடிக்கும் வகையில் யார் இந்த அணிக்கு வலுசேர்த்தாலும் அது நல்லதுதான்.
இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். மாநிலங்களவை தேர்தலில் கூட்டணி கட்சியினர் யார் நின்றாலும் அவர்களுக்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்." என தெரிவித்தார்.
இதுவரை திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ள கட்சிகள் அனைத்தும் கூடுதல் தொகுதி கேட்டுள்ளன. ஆனால் மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய புதிய கட்சிகள் வரவால் கூடுதல் தொகுதி என்பது தர முடியாது என கறார் காட்டுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

