'தி ஒடிஸி', ராமாயணம், மகாபாரதம்... மூன்றும் ஒரே கதையா? 

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'தி ஒடிஸி' (The Odyssey) வெளியாகியுள்ளது. கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய மகாகாவியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், இந்திய இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றுடன் பல ஒற்றுமைகளை கொண்டிருப்பதாக சினிமா ரசிகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.

Jul 17, 2026 - 16:30
Jul 17, 2026 - 16:28
'தி ஒடிஸி', ராமாயணம், மகாபாரதம்... மூன்றும் ஒரே கதையா? 

வீடு திரும்பும் பயணம்

தி ஒடிஸியின் நாயகன் ஒடிஸியஸ், ட்ரோஜன் போருக்குப் பிறகு தனது தாயகமான இதாக்காவிற்கும் மனைவி பெனலோப்பிடமும் திரும்ப பல ஆண்டுகள் போராடுகிறார். அதேபோல், இராமர், 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்து அயோத்திக்குத் திரும்புகிறார். இரு கதைகளிலும், வீடு திரும்பும் பயணமே முக்கிய கருவாக அமைகிறது.

மனைவிக்கான போராட்டம்

ராமாயணத்தில், சீதையை மீட்க இராமர் போரிடுகிறார். தி ஒடிஸியில், ஒடிஸியஸ் ட்ரோஜன் போரில் மற்றொருவரின் மனைவியை மீட்கும் போரில் பங்கேற்றாலும், அவரது மனம் முழுவதும் தனது மனைவி பெனலோப்பியிடமே இருக்கும். இரு கதைகளிலும் குடும்ப பாசமும், வாழ்க்கைத் துணையை அடைய வேண்டும் என்ற உறுதியும் முக்கிய இடம் பெறுகின்றன.

கடவுள்களின் தலையீடு

ராமாயணம், மகாபாரதம் மற்றும் தி ஒடிஸி ஆகிய மூன்றிலும் கடவுள்கள் வெறும் பார்வையாளர்களாக இருப்பதில்லை. கிருஷ்ணர், அனுமன், அதீனா, ஜீயஸ், அப்ரோடைட் உள்ளிட்ட தெய்வங்கள் கதையின் போக்கை மாற்றும் முக்கிய சக்திகளாக செயல்படுகின்றனர்.

மாயையின் சோதனை

ராமாயணத்தில் மாரீசன், பொன் மானாக மாறி இராமரை ஏமாற்றுவது போல, தி ஒடிஸியிலும் ஒடிஸியஸ் மந்திர சக்திகளும் மாயைகளும் நிறைந்த சோதனைகளை எதிர்கொள்கிறார். இரு கதைகளிலும் நாயகன் மாயையின் மூலம் சோதிக்கப்படுகிறார்.

வில்லை வளைக்கும் சவால்

ராமாயணத்தில் சீதையை மணப்பதற்காக சிவதனுசை வளைக்கும் நிகழ்வு முக்கியமானது. தி ஒடிஸியில், பெனலோப்பியை மணக்க விரும்புவோருக்கு ஒடிஸியஸின் வில்லை வளைக்கும் சவால் வைக்கப்படுகிறது. இறுதியில் அந்த வில்லை வளைத்து தனது உண்மையான அடையாளத்தை ஒடிஸியஸ் வெளிப்படுத்துகிறார்.

அமானுஷ்ய உலகம்

சைக்க்ளாப்ஸ், தேவதைகள், மந்திர சக்திகள், அரக்கர்கள், அப்சரஸ்கள் போன்ற அமானுஷ்ய அம்சங்கள் தி ஒடிஸியில் இடம்பெறுகின்றன. அதேபோல், ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் அரக்கர்கள், தெய்வங்கள், தெய்வீக ஆயுதங்கள் உள்ளிட்ட அற்புத அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அரசாட்சியும் போரும்

இதாக்கா ராஜ்ஜியம், அயோத்தி, ஹஸ்தினாபுரம் போன்ற அரசாட்சிகள் இந்த மகாகாவியங்களின் மையமாக உள்ளன. அரச அரியணை, போர், அதிகாரம், நீதி, தர்மம் ஆகியவை மூன்று கதைகளிலும் தொடர்ந்து பேசப்படும் கருப்பொருள்களாக உள்ளன.

வெவ்வேறு கலாச்சாரம்... ஒரே மனித உணர்வுகள்

கிரேக்கமும் இந்தியாவும் வெவ்வேறு நாகரிகங்களைச் சேர்ந்தவை என்றாலும், குடும்பம், காதல், தர்மம், தியாகம், வீடு திரும்புதல், நம்பிக்கை, வீரியம் போன்ற மனித உணர்வுகளே இந்த மகாகாவியங்களை ஒன்றோடொன்று இணைக்கின்றன. அதனால் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பிறகும், தி ஒடிஸி, ராமாயணம், மகாபாரதம் ஆகியவை உலக இலக்கியத்தின் அழியாத படைப்புகளாக தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow