ரஜினிகாந்த், நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: அண்ணாமலை புதிய கட்சி குறித்து ஆலோசனை?
நடிகர் ரஜினிகாந்த் உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பின் போது அண்ணாமலை தொடங்க உள்ள புதிய கட்சி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான புத்தகத்தை வழங்கினார்.
இந்த சந்திப்பு புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டிருப்பதாவது: இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதாசாகெப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் ரஜினிகாந்த்தை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான அரவிந்த் மேனனுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம்.இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியகராஜன் மற்றும் மாநில பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அண்ணாமலை ஆதரவாளர்கள் பயன்படுத்தி வந்தனர். அதற்கு ரஜினி தடை விதித்துள்ளார். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ரஜினிகாந்த் சந்திப்பின் போது அண்ணாமலை தொடங்க உள்ள புதிய கட்சி குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அண்ணாமலை கட்சிக்கு ஆதரவு வேண்டாம் என ரஜினியிடம் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?













