ஜி.கே.வாசன், தம்பிதுரை, திருச்சி சிவா உள்பட 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிகாலம் ஏப்ரலில் முடிகிறது
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை, திமுக திருச்சி சிவா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிகாலம் அடுத்த ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.
தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலியாகிறது.
இதன் காரணமாக 6 இடங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க. சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு ஆகியோரும் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான த.மா.கா. சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசனும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த 6 பேரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 6 இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 1-ந்தேதிக்குள் இந்த இடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது.
இந்த 6 இடங்களில் தி.மு.க. சார்பில் 4 பேரும் அ.தி.மு.க. சார்பிலும் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் யார் யாருக்கு மீண்டும் எம்.பி. பதவி பெற திமுக அதிமுக கட்சியில் கடும் போட்டி நிலவி வருகிறது. தேமுதிகவிற்கு 1 ராஜ்யசபா பதவியை கொடுத்து கூட்டணிக்குள் கொண்டு அதிமுக முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

