நெல்லை- திருச்செந்தூர் ரயில் சோதனை ஓட்டம் நிறைவு -ரயிலை இயக்க முடிவு

திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து எஞ்சின் மட்டும் சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

Jan 6, 2024 - 14:56
Jan 6, 2024 - 17:01
நெல்லை- திருச்செந்தூர் ரயில் சோதனை ஓட்டம்  நிறைவு -ரயிலை இயக்க முடிவு

மழை வெள்ளத்தால் ரயில்வே பாதை சேதமடைந்து அதை சீர் செய்யப்பட்ட நிலையில் இன்று திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் ரயில் எஞ்சினை 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி பொறியாளர் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். சோதனை ஓட்டத்திற்கு பின்பு பொறியாளர் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இன்று மாலையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் அதீத கன மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக கடந்த 17- ந்தேதி  நெல்லை திருச்செந்தூர் இடையே ரயில்வே பாதையில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர்  அருகே தாதன்குளத்தில் ரயில்வே பாதை முழுவதுமாக அறிக்கப்பட்டு சேதம் அடைந்தது. இதனால் திருச்செந்தூரில் இருந்து வந்த செந்தூர் விரைவு ரெயில் திருவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

அங்கும் ரெயில் நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் ரெயிலில் வந்த 500 பயணிகள் பரிதவிப்பிற்கு உள்ளாகினர். பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே பெரும் மழை வெள்ளம் காரணமாக தாதன்குளம், திருவைகுண்டம், செம்பூர், ஆறுமுகநேரி ஆகிய இடங்களில் ரெயில்வே பாதை சேதம் அடைந்தது. இதனால் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே முற்றிலும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு கடந்த 20- ந்தேதி முதல் ரெயில் பாதை சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது.

17 நாட்களாக நடந்து வந்த சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில் இன்று திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே தென்னக ரெயில்வே தலைமைப் பொறியாளர் பென்னிக் தலையில் சோதனை ஒட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து எஞ்சின் மட்டும் சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது. எஞ்சின் சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்தனர்.

ரெயில்வே பாதை சேதமடைந்த இடத்தில் மட்டும் ரெயில் எஞ்சின் மெதுவாக இயக்கி பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர். இதுபோன்று இதே ரெயில்  மறுமார்க்கத்தில்  திருச்செந்தூரில் இருந்து  திருநெல்வேலிக்கும் சோதனை ஓட்டம் நடக்கிறது. சோதனை ஓட்டம் நிறைவடைந்து பொறியாளர் குழுவினர் அறிக்கை அளித்ததன் அடிப்படையில் இன்று மாலையே செந்தூர் விரைவு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow