பாஜக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்த அண்ணாமலை....டெல்லி எடுக்க போகும் முடிவு என்ன?
மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அண்ணாமலை தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்ததாகக் கருதப்படும் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, அண்மையில் நீட் மறுதேர்வு மற்றும் காவிரி விவகாரங்களில் மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீட் மறுதேர்வு தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், வினாத்தாள் கசிவைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்றாலும், தேர்வு நேரத்தை அதிகரித்தல், பல கட்ட சோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மாணவர்களின் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். மேலும், இது தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) வலியுறுத்தும் "தேர்வு மன அழுத்தத்தைக் குறைக்கும்" நோக்கத்திற்கு முரணானது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்திலும் மத்திய அரசின் சமீபத்திய நிலைப்பாட்டுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருப்பது,
கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா? தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அண்ணாமலை தற்போது மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறிவருகிறது. அண்ணாமலையின் இந்த செயல்பாடுகள் குறித்து மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் ? என்று கேள்வி எழுந்துள்ளது.
What's Your Reaction?